தலைவர்களே வேட்பாளர்களாக.. தேர்தல் வினோதங்கள்

Subscribe to Oneindia Tamil

Vijaykanth
-கே.என். வடிவேல்

மதுரை: இதுவரை நடந்தில்லை இப்படி ஒரு தேர்தல் திருவிழா. வித்தியாசமான தேர்தல் களத்தைக் கண்டுள்ளனர் தமிழக மக்கள்.

காரணம் உள்ளூர் பிரச்சினைகளோ அல்லது உள்நாட்டுப் பிரச்சினைகளோ இன்று மக்கள் முன் வைத்து யாரும் பிரசாரம் செய்யவில்லை. மாறாக, நமது அண்டை நாடான இலங்கையில், துடிதுடித்துக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களின் பிரச்சினையை மையமாக வைத்து இந்த தேர்தல் களத்தை சுற்றிச் சுற்றி வந்தனர் நம்ம ஊர் அரசியல்வாதிகள்.

இந்தத் தேர்தலில் இன்னொரு விசேஷம், எந்த ஒரு அலையும் வீசாதது. தேசிய அளவிலும் சரி, தமிழக அளவிலும் எந்த ஒரு அலையும் இல்லை என்றே சொல்லலாம்.

அதேபோல இன்னொரு வினோதத்தையும் கண்டுள்ளனர் நம்ம ஊர் மக்கள். தலைவர்கள் ஆளுக்கு ஒரு 'ஆம்புலன்ஸ் டைப்' வேனை எடுத்துக் கொண்டு வேனுக்கு வெளியே தலையை நீட்டியபடி நாங்கள் அதைச் செய்வோம், நாங்கள் இதைச் செய்வோம், எதையும் செய்வோம் என பிரசாரம் செய்வார்கள்.

ஆனால், இம்முறை முதல்வர் கருணாநிதி பிரச்சாரத்துக்கே செல்ல முடியாத நிலை. எதிர்க் கட்சித் தலைவியான ஜெயலலிதா ஹெலிகாப்டரே கதி என்று இருந்தார்.

திமுகவைப் பொறுத்தவரை 'தேர்தல் மன்னன்' என கட்சியினரால் செல்லமாக அழைக்கப்படும் மு.க.அழகிரி இந்த முறை மதுரை தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் தென் மாவட்டங்களில் உள்ள தொகுதிகள் அனைத்துக்கும் அவரால் போக முடியவில்லை. மதுரையிலேயே கடும் போட்டி இருப்பதால் தனது வெற்றியைப் பத்திரமாக்க வேண்டிய நிலை அவருக்கு.

இதனால் அழகிரியின் பிளானிங் மட்டுமே மற்ற தொகுதிகளில் கொண்டு செல்லப்பட்டு அதற்கேற்ப தொண்டர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் என்னதான் இருந்தாலும் அழகிரியே வந்து அமர்ந்து வேலையைப் பார்த்தால் கிடைக்கிற 'அழகே' தனி என்று திமுகவினர் கூறுவதை கேட்க முடிந்தது.

திமுகவின் ஸ்டார் பேச்சாளர், நம்பிக்கை நட்சத்திரம் முதல்வர் கருணாநிதி மட்டுமே. ''என் உயிரினும் மேலான கழக உடன் பிறப்பே'' என்று அந்த கருணாநிதி அழைக்கிற லாவகத்திற்கு, கட்சித் தொண்டர்களிடையே கிடைக்கும் வரவேற்பும் உணர்ச்சிப் பெருக்கும் வேறு எந்தத் தலைவருக்கும் கிடைக்காத அபூர்வம்.

ஆனால் இந்தத் தேர்தல் களத்தில் கருணாநிதியின் பிரசாரமுமம் மிஸ்ஸிங், அவரது பேச்சும் மிஸ்ஸிங். இதனால் திமுகவினர் பெருமளவில் சுரத்திழந்து போய் விட்டனர். என்னதான் மு.க.ஸ்டாலின் பட்டி தொட்டியெங்கும் போய் வந்தாலும், கனிமொழி செலக்டிவாக பிரசாரம் செய்தாலும் கூட கருணாநிதி வராத குறையை யாராலும் நிவர்த்தி செய்ய முடியவே இல்லை.

திமுகவிற்கு எதிராக எதிர்க் கட்சிகள் முன்னிலைப்படுத்தும் விலைவாசி உயர்வு, மின்தடை, வேலை இல்லா திண்டாட்டம், இலங்கை பிர்ச்சனை போன்றவைகளுக்கு தனக்கே உரிய பாணியில் பேசிப் பேசியே அவைகளை நீர்த்துப் போக செய்திருக்கும் வல்லமை கருணாநிதிக்கு மட்டுமே உண்டு. அதை செய்ய முடியாமல் போனது திமுகவுக்கு பின்னடைவே.

மதிமுகவைப் பொறுத்தவரை இந்த முறை வைகோவே விருதுநகரில் நிற்கிறார். இதனால் தமிழகம் முழுவதும் அவரால் பிரசாரம் செய்ய முடியாத நிலை. இருப்பினும் தனது கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் முக்கியமான கூட்டணிக் கட்சியினரின் தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்துள்ளார் வைகோ.

காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சேலத்தில் நிற்கிறார். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிவங்கையிலும், ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் போட்டியிடுகின்றனர். இவர்கள் எல்லாம் வழக்கமாக மாநிலம் முழுவதும் சுற்றி வந்து ஓட்டு சேகரிக்கக் கூடிய தலைவர்கள். ஆனால் இந்த முறை தத்தமது தொகுதிகளோடு நின்று விட்டனர்.

அதேபோல, தமிழக அளவில் தலித் மக்களின் முக்கியத் தலைவரான திருமாவளவன் இந்த முறை சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதால் தமிழகம் முழுவதும் இவராலும் பிரசாரத்திற்குப் போக முடியவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் வட சென்னையில் வெற்றியை எதிர் நோக்கி காத்துக் கிடக்கிறார். இவரும் தமிழகம் முழுவதும் போய் பிரசாரம் செய்யவில்லை.

'அதிரடி புதிரடிக்கு' பெயர் போன புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி ரேசில் உள்ளார். எதிர்பாராத ஆதரவாக கார்த்திக்கும், சரத்குமாரும் சப்போர்ட் செய்துள்ளதால், அந்த மகிழ்ச்சியிலிருந்து இன்னும் அவர் வெளியே வரவில்லை.

பாஜக ஒரு சில தொகுதிகளில் நின்றாலும், அதன் நம்பிக்கை நட்சத்திரங்களான திருநாவுக்கரசர் இராமநாதபுரத்திலும், பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியிலும் பிரகாசிப்பார்கள் எனத் தெரிகிறது.

இக்கட்சியின் தலைவரான இல.கணேசனும் இம்முறை போட்டியிடுகிறார். தென் சென்னையில் அவர் போட்டியிடுவதால் சென்னையைத் தாண்டி அவரும் வர முடியாமல் போனது.

பாமகவைப் பொறுத்தவரை அந்தக் கட்சி போட்டியிடும் தொகுதிகளை பிரித்து எடுத்துக் கொண்டு திமுக அமைச்சர்கள் நடத்திய பிரச்சாரத்தால் அனல் பறந்தது. பாமகவின் 7 தொகுதிகளையும் தலா 3 அமைச்சர்கள் கையில் எடுத்துக் கொண்டு களமிறங்கியதால் அவர்களை சமாளிக்க 7 தொகுதிகளுக்கும் மாறி மாறி போய் வரவே அதன் தலைவர் ராமதாசுக்கு நேரம் சரியாக இருந்தது.

நாமக்கல் தொகுதியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் உ.தனியரசு 'தனியே தன்னந்தனியே' திராவிட கட்சிகளை எதிர் கொள்கின்றார்.

மற்றொரு பக்கம் பொள்ளாச்சியில் கொங்கு முன்னேற்றப் பேரவை மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி 'பெஸ்ட்' ரிசல்ட்டுக்காக காத்துக் கிடக்கிறார்.

இப்படி தலைவர்கள் எல்லாம் போட்டியில் குதித்து விட்டதால் முன்பு போல இந்த முறை தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கவில்லை, விறுவிறுப்பும் இல்லை.

ஆனால் தமிழகம் முழுவதும் சுற்றி வந்த ஒரே தலைவராக விளங்குகிறார் விஜயகாந்த். இவர் மட்டும்தான் கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து பட்டி தொட்டிகளையும் தனது பிரசார பயணத்தால் தொட்டுப் பார்த்து விட்டு வந்துள்ள ஒரே தலைவர்.

விடிஞ்சா வாக்குப் பதிவு. யாருக்கு என்ன கிடைக்கப் போகிறதோ, காத்திருந்து பார்ப்போம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+