தேர்தல்-மேட்டூர் காவல் நிலையத்துக்கு பூட்டு!
மேட்டூர்: மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த அனைத்து போலீசார் அனைவரும் தேர்தல் பணிக்கு சென்றுவிட்டதை அடுத்து, அந்த காவல் நிலையத்துக்கு போலீசார் பூட்டு போட்டுள்ளனர்.
மேட்டூரில், பவானி மெயின்ரோட்டில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், மூன்று ஏட்டுகள் என மொத்தம் ஐந்து பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர்லை முன்னிட்டு சேலம் புறநகர் பகுதியைச் சேர்ந்த 33 காவல் நிலையம் மற்றும் ஐந்து மகளிர் காவல் நிலைய போலீசார் அனைவரும் சேலத்திற்கு வரழைக்கப்பட்டு, அங்கே அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் தங்கள் ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டுச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதே போல் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் உள்பட அனைவரும் தேர்தல் பணிக்காக நேற்று சேலம் புறப்பட்டு சென்று விட்டனர். இதையடுத்து நேற்று மேட்டூர் மகளிர் காவல் நிலையத்திற்கு பூட்டு போடப்பட்டது.
மேட்டூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை ஒருநாளும் பூட்டியது இல்லை என்று காவல் துறை வட்டராங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து புகார் கொடுக்க வரும் மக்கள் காவல் நிலையம் பூட்டியிருப்பதை பார்த்து அதிர்ச்சியுடன் திரும்புகின்றனர்.