நெல்லை, தென்காசி: தேர்தல் பாதுகாப்புக்கு 5000 போலீ்ஸ்
நெல்லை: நெல்லை மற்றும் தென்காசி தொகுதிகளில் 558 வாக்குசாவடிகள் பதட்டமானவையாக அறியப்பட்டுள்ளன. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை, தென்காசி தொகுதிகளில் நாளை வாக்குபதிவு நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் 2330 வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு நடக்கிறது. 17 லட்சத்து 93 ஆயிரத்து 249 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்கு பதிவு இயந்திரங்கள் மண்டல அலுவலர்கள் மூலம் இன்று எடுத்து செல்லப்படுகின்றன.
நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குபதிவு நடக்கிறது. வாக்கு பதிவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் 558 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்கு சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு முழுவதும் வீடியோ கேமிரா மூலம் பதிவு செய்யப்படுகிறது.
பொதுமக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வந்து வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பழனியாண்டி தெரிவித்தார்.
தென்காசி தொகுதிக்குட்பட்ட ராஜபாளையம், ஸ்ரீவி்ல்லிபுத்தூர் ஆகிய சட்டசபை தொகுதி வாக்கு சாவடிகள் விருதுநகர் மாவட்டத்தி்ல் உள்ளன. ராஜபாளையம் தொகுதியில் 190 வாக்கு சாவடிகளும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 226 வாக்கு சாவடிகளிலும் நாளை வாக்கு பதிவு நடக்கிறது.
வாக்குபதிவு முடிந்ததும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஓட்டு எண்ணிக்கை மையமான குற்றாலம் பராசக்தி கல்லூரிக்கு எடுத்து வரப்படுகின்றன.
தேர்தல் பணியில் 11,500 ஊழியர்கள்
அதே போல நெல்லை மற்றும் தென்காசி தொகுதிகளில் தேர்தல் பணிக்காக சுமார் 11 ஆயிரத்து 500 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி என இரண்டு தொகுதிகள் உள்ளன. இதில் 12 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. இங்கு வாக்குபதிவிற்காக 2 ஆயிரத்து 330 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு வாக்கு சாவடிக்கு தலைமை அலுவலர் ஒருவர், வாக்கு சாவடி அலுவலர் 1, 2 ஏ, 3 ஆகிய நிலைகளில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் நியமிக்கப்படுவர். அந்த வாக்குசாவடிகளில் 1200க்கும் அதிகமான வாக்காளர்கள் இருந்தால் வாக்கு சாவடி அலுவலர் 2 பி நிலையில் கூடுதலாக ஒருவர் நியமிக்கப்படுவார்.
இவர்களுக்காக பயி்ற்சி வகுப்பு இரண்டு கட்டமாக நடந்தது. இதை தொடர்ந்து மூன்றாவது கட்ட பயிற்சி வகுப்பு நெல்லை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் நேற்று நடந்தது. இந்த பயிற்சி முகாமில் வாக்கு சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
நெல்லை, தென்காசி தொகுதிகளில் 11,500 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு அந்தந்த வாக்குசாவடிகளில் பணிக்கு ஆஜராகின்றனர்.
தென்காசி தொகுதிக்குட்பட்ட வாசுதேவநல்லூர், சிவகிரி மற்றும் தென்காசி பகுதியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணி ஆணை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அவர்களுக்கம், வருவாய் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.












Click it and Unblock the Notifications