வன்முறைக்கு அதிமுக சதி-தொண்டர்களுக்கு திமுக எச்சரிக்கை
சென்னை: இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதால் திமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை அண்ணாநகரில் உள்ள திமுக பிரமுகர் துறைமுகம் காஜா வீட்டிற்கு அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு தலைமையில் 300 ரெளடிகள் சென்று, அங்கே சுய உதவிக்குழுக்களுக்கு பணம் கொடுப்பதாக புரளி கிளப்பிவிட்டனர். உடனடியாக காவல்துறையினரும், தேர்தல் பார்வையாளரும் துறைமுகம் காஜா வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது, அவர்களுடைய குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அங்கு இல்லை.
இன்று நடைபெற உள்ள தேர்தலில் அதிமுகவினர் வன்முறைகளில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே, அனைத்துத் தொகுதிகளிலும் திமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தலைமைக் கழகம் கேட்டுக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.