Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல இடங்களில் இயந்திரங்களில் கோளாறு-வாக்குப் பதிவு பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் காலையில் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.

இன்று காலை பல பகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.

சென்னையில் மட்டும் திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், மண்ணடி, மடிப்பாக்கம் உள்பட 50க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் உள்ள ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பழுதானது. பின்னர் அது சரி செய்யப்பட்டு சுமார் 1 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது

மதுரையை அடுத்துள்ள தனக்கன்குளத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 6 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் 23-ம் எண் ஆண்கள் வாக்குச்சாவடியில் இருந்த மின்னணு எந்திரம் பழுதானது.

துணை தாசில்தார் கல்யாணசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் ஆகியோர் முன்னிலையில் அது சரிபார்க்கப்பட்டது. அதன் பின்னர் 40 நிமிட தாமத்துக்கு பின்னர் 7.40 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் 16-வது வார்டு வாக்காளர்கள் புதுப்பேட்டை சின்னசாமி அய்யன் நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில், மின்னணு எந்திரத்தில் திடீர் என்று கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வாக்காளர்கள் ஓட்டு போடாமல் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

ஆத்தூர் எம்.எல்.ஏ. எம்.ஆர்.சுந்தரம் காலை ஓட்டு போட சிவில் சப்ளை குடோன் சென்றார். அங்குள்ள 127-வது வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு எந்திரம் பழுதானது. உடனே அங்கு ஓட்டுபதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் மாற்று எந்திரம் பொருத்தப்பட்டட பின்னர் மீண்டும் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

தலைவாசல் தொகுதி மணிவிழுந்தான் தெற்கு வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு எந்திரம் திடீர் என்று கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கும் ஒட்டுபதிவு நிறுத்தப்பட்டது.

வாக்காளர்கள் சாலை மறியல்..

விழுப்புரம்-புதுவை சாலையில் கோலியனூர் ஒன்றியத்துக்குட்பட்ட சாலை அகரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஒரு வாக்குச்சாவடியில் இன்று காலை மின்னணு எந்திரம் பழுதாகி விட்டது.

இதனால் வாக்களிக்க வந்தவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நீண்ட நேரம் ஆனதால் ஆவேசம் அடைந்த வாக்காளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி நேரடியாக தலையிட்டு வாக்குப்பதிவு எந்திரத்தை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதே போல் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியிலும் மின்னணு எந்திரம் பழுதானதால் குழப்பம் ஏற்பட்டது.

விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வேம்பி, பூண்டி ஆகிய 2 ஊர்களில் வாக்குச்சாவடிகள் வெவ்வேறு இடத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. அதாவது வேம்பி கிராம வாக்காளர்கள் பூண்டியிலும், பூண்டி வாக்காளர்கள் வேம்பியிலும் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கு வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அதிகாரிகள் வந்து சரி செய்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கூரம், காஞ்சீபுரம் பச்சையப் பன் பள்ளி வாக்குச்சாவடி, கூத்தரம்பாக்கம் உள்பட 15 இடங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் ஓட்டுப்பதிவு தாமதம் அடைந்தது. பின்னர் மாற்று எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு சரி செய்யப்பட்டன.

கோவை பாராளுமன்ற தொகுதியில் பெரும்பாலான வாக்கு சாவடிகளில் எந்திர கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக தாமதமாக ஓட்டுப்பதிவு தொடங்கியது.

நெல்லை சிந்துபூந்துறை வாக்குச்சாவடியில் முதல் ஓட்டை பதிவு செய்த போதே எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து வேறு மின்னணு எந்திரம் கொண்டு வரப்பட்டு ஓட்டுப் பதிவு தொடங்கியது.

கன்னியாகுமரியில், சுசீந்திரம் அரசு தொடக்கப்பள்ளி, வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி, ஆத்திக்காட்டுவிளை அரசு தொடக்கப்பள்ளி, ஸ்காட் மேல்நிலைப்பள்ளி, தோவாளை அரசு தொடக் கப்பள்ளி வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்கியபோது மின்னணு எந்திரங்கள் திடீரென செயல்படாமல் போனது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் 30 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு நடந்தது.

இந்த குளறுபடிகள் காரணமாக காலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளிலும் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.

ஓட்டே விழாத இயந்திரம்..

நெல்லை சிந்துபூந்துறை ஆக்ஸ்போ பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு காலை 7 மணிக்கே மக்கள் ஓட்டுப்போட வந்தனர்.

இந்த நிலையில் பெண்கள் வாக்குச்சாவடி எந்திரத்தில் முதல் ஓட்டை பதிவு செய்தபோதே கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்காளர்கள் அதிருப்தி அடைந்தனர். அதிகாரிகள் நீண்ட நேரம் முயற்சி செய்த போதிலும் அதனை சரி செய்ய முடியவில்லை.

இதையடுத்து வேறு மின்னணு எந்திரம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

25 இடங்களில் கோளாறு..

நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 25 இடங்களில் ஓட்டுப்பதிவு எந்திரம் கோளாறு காரணமாக சிறிது நேரம் தாமதம் ஆனது. உடனடியாக அதை அதிகாரிகள் சரி செய்து ஓட்டுப்பதிவு நடக்கச் செய்தனர்.

ராதாபுரம் தொகுதி அம்பலவானபுரம் வாக்குச்சாவடியில் சுமார் 1 மணி நேரம் எந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

ஆவுடையப்பன், கீதா ஜீவன் வாக்களித்தனர்..

நெல்லையில் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், ஆலங்குளத்தில் அமைச்சர் பூங்கோதை, தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் இன்று வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

நெல்லை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் இன்று காலை 7.25 மணிக்கு திசையன்விளை அடுத்த குறுகால்புரம் வி.வி. இந்து தொடக்க பள்ளியில் வரிசையில் நின்று ஓட்டு போட்டார். அவரது மனைவி கேத்தரினும் உடன் வந்து வாக்களித்தார்.

தூத்துக்குடி போல் பேட்டையில் உள்ள கூட்டுறவு பண்டகசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் கீதாஜீவன் வரிசையில் நின்று காலை 7.40 மணிக்கு ஓட்டு போட்டார். அவரது கணவர் ஜீவனும் உடன் வந்து வாக்களித்தார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பிரகாஷ் தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் தனது மனைவி சிந்துஜாவுடன் வந்து வரிசையில் நின்று காலை 7.25 மணிக்கு ஓட்டு போட்டார்.

முன்னதாக அந்த வாக்குச்சாவடி மற்றும் மின்னணு எந்திரங்களை கலெக்டர் பிரகாஷ் ஆய்வு செய்தார்.

தென்காசி தொகுதிக்குட்பட்ட கரிவலம் வந்தநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு பின்னர் தொடர்ந்தது.

பந்தப்புளி கிராமத்தில் ஒரு தரப்பினர் தேர்தலைப் புறக்கணித்து ஓட்டுப் போடவில்லை.

மதுரை மாவட்டம் கருக்கட்டான் என்ற இடத்தில் மின்னணு வாக்குப் பதிவு காலையில் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அதேபோல தேனி மாவட்டம் பெரில இலந்தைக்குளம் என்ற கிராமத்தில், மின்னணு இயந்திரக் கோளாறால் அரை மணி நேரம் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.

நெல்லை கலெக்டருக்கு ஓட்டில்லை..

நெல்லை மாவட்ட கலெக்டர் பழனியாண்டி தனது முகவரியை மாற்றி கொடுக்காததால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை.

கலெக்டரின் மனைவி மற்றும் மகன் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் வசித்து வருவதால் அங்கு அவர்களுக்கு ஓட்டு உள்ளது. கலெக்டர் பழனியாண்டியின் பெயரும் அங்குள்ள வாக்காளர் பட்டியலில் உள்ளது. இதனால் கலெக்டர் பழனியாண்டி நெல்லையில் ஓட்டுப் போட முடியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+