கார்த்திக் கட்சி தேனி வேட்பாளர் விலகல்!
தேனி: கார்த்திக் ஒரு ஏமாற்று பேர் வழி. அவர் தேர்தல் நேரத்தில் பணம் சம்பாதிக்கவே கட்சி நடத்துகிறார். அதனால் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் தேனி தொகுதி போட்டியிலருந்தும் விலகி கொள்கிறேன் என அக்கட்சி மகளிர் அணி தலைவி பார்வதி தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருக்கும் நாடாளும் மக்கள் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. விருதுநகரில் கட்சி தலைவர் கார்த்திக்கும், தேனி தொகுதியில் அக்கட்சியின் மகளிர் அணி தலைவி பார்வதியும் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில் தேனி தொகுதி வேட்பாளர் பார்வதி செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க கூறுகையில்,
எங்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் என்னிடம் ரூ. 5 லட்சம் வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டார். தேர்தல் பிரசாரத்துக்காக அவர் ஒரு கொடி கூட தரவில்லை. தேர்தல் நிதியாக வந்த ரூ. 1 கோடியையும் அவரே வைத்துக் கொண்டார்.
தேர்தல் நேரத்தில் பணம் சம்பாதிக்கவே அவர் கட்சி நடத்துகிறார். இதனால், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியில் நான் வகிக்கும் மாநில மகளிர் அணி தலைவர் பதவியையும், எனது அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன். மேலும் தேர்தலில் இருந்து விலகி கொள்கிறேன் என்றார்.
தேர்தல் நேர்த்தில் அவர் போட்டியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.