மேகாலயாவில் காங். ஆட்சி-லபாங் முதல்வரானார்
ஷில்லாங்: மேகலாயாவில் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. லபாங் புதிய முதல்வராகப் பதவியேற்றார்.
மேகலாயாவில் தேசியவாத காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் கூட்டணியில் திடீர் பிளவு ஏற்பட்டது.
கடந்த மார்ச் மாதம் அங்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது இரு தரப்புக்கும் தலா 27 வாக்குகள் வி விழுந்தன. இதையடுத்து சபாநாயகர் தனது ஓட்டைப் பயன்படுத்தி ஆட்சியைக் காப்பாற்றினார்.
அதற்கு முன்பாக நான்கு எம்.எல்.ஏக்களின் பதவியை அவர் பறித்து விட்டார். இதன் காரணாகவே அரசு வெற்றி பெற முடிந்ததால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் தரப்பில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிகள் நடந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காங்கிரஸ் புதிய ஆட்சியை அமைத்தது. லபாங் முதல்வராகப் பதவியேற்றார்.
மேகாலயாவில் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 60. அதில் 26 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்தனர். ஐக்கிய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.க்கள் 9 பேரும் சுயேட்சைகள் 2 பேரும் காங்கிரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இதனால் 37 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.
ஆதரவு கொடுத்துள்ள ஐக்கிய ஜனநாயகக் கட்சிக்கு துணை முதல்வர் பதவி உள்பட 2 அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.