2 நாளில் 1700 தமிழர்கள் படுகொலை-புலிகள்
கொழும்பு: இலங்கைப் படையினரின் கொடும் தாக்குதல் காரணமாக கடந்த 48 மணி நேரத்தி்ல 1700 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 3000க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கடுமையான வார்த்தைகளால் இலங்கையை எச்சரித்தும் கூட, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முறைப்பட இலங்கை போரை நிறுத்த வேண்டும் எனக் கூறியும் கூட அதை சற்றும் பொருட்படுத்தாமல் அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசும், ராணுவமும் தீவிரப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கனரக பீரங்கித் தாக்குதலை தொடர்ந்து இலங்கைப் படைகள் நடத்தி வருகிறது.
உலக நிதித் திட்டக் கழகம் வழங்கிய அவசர கால உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற செஞ்சிலுவைச் சங்க கப்பலை ராணுவம் போர் பாதித்த பகுதிக்கு செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. மீறிப் போனால் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை என்றும் ராணுவம் மிரட்டுகிறது.
அதேபோல, மீட்புப் பணிக்காக செல்ல வேண்டிய கப்பலையும் ராணுவம் விடாமல் தடுத்து வருகிரது.
கிட்டத்தட்ட 1400 நோயாளிகள் உரிய சிகிச்சை இல்லாமல் சாவை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருக்கின்றனர். நிலைமை இப்படியே நீடித்தால் உயிரிழப்புகள் ஏராளமாகி விடும்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த தற்காலிக மருத்துவமனை மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் அங்கிருந்து டாக்டர்களும், மருத்துவ ஊழியர்களும் பதுங்கு குழிகளுக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
உள்ளூர் டாக்டர்கள் மருத்துவமனையை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அப்படியாவது ராணுவம், மருத்துவமனையை தாக்காமல் இருக்குமே என்று அவர்கள் நம்புகிறார்கள்.
எனவே அப்பாவி மக்களை மேலும் அழிவிலிருந்து காக்க சர்வதேச சமுதாயம் முன்வர வேண்டும். மனிதாபிமான நெருக்கடிக்கு முடிவு கட்ட சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து செயல்பட விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செஞ்சிலுவைச் சங்க கப்பல்கள் தடுப்பு...
இலங்கையின் வட பகுதியில் ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருவதாகவும், தங்களது பணியாளர்களை அனுமதிக்காமலும், மீட்புப் பணிக்காக தங்களது கப்பலை அனுமதிக்காமலும் இலங்கை அரசு தடுத்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து செஞ்சிலுவைச் சங்க செய்தித் தொடர்பாளர் சரசி விஜரத்னே கொழும்பில் கூறுகையில்,
நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பலையும், காயமடைந்தவர்களை மீட்டுக் கொண்டு வரும் கப்பலையும் போர்ப் பகுதிக்கு செல்ல விடாமல் கடந்த 3 நாட்களாக இலங்கை ராணுவம் தடுத்து வருகிறது.
சண்டை மேலும் மேலும் தீவிரமடைந்து வருவதால், அப்பாவி மக்களின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
உணவு, மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் காயமடைந்தோருக்கு சிகிச்சை தர முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுகுறித்து இலங்கை மனித உரிமைத் துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே கூறுகையில், இலங்கைப் படைகள் சிறிய ரக ஆயுதங்களை வைத்துத்தான் போரிட்டு வருகின்றன. கனரக ஆயுதங்களை நாங்கள் பயன்படுத்தவில்லை.
விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும், ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறியிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு சரணடைந்தால் அடுத்த நிமிடமே சண்டையை நிறுத்தி விடுவோம். அதன் பிறகு மக்களை விடுவிக்க ஆயுதங்கள் தேவைப்படாது.
ராணுவம் தற்போது மிகவும் குறுகிய பகுதிக்குள் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் முயற்சியில் மட்டுமே ஈடுபட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே, ராணுவ செய்தித் தொடர்பாளர் உதயநாணயக்காரா கூறுகையில், நேற்று இரவு நடந்த கடும் சண்டையில் 19 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications