பிபிஓவில் பணியாற்றும் பெண்கள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு

கடந்த 2 ஆண்டுகளில் ஐடி-பிபிஓ துறையில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை 6.7 லட்சமாக உயர்ந்துள்ளது.
மெர்சர் என்ற எச்.ஆர். ஆலோசனை நிறுவனமும், நாஸ்காமும் இணைந்து நடத்திய சர்வேயில் இது தெரிய வந்துள்ளது.
45 முன்னணி ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோரை வைத்து இந்த சர்வே நடத்தப்பட்டது.
விடுமுறை அளிப்பதில் கடைப்பிடிக்கப்படும் சலுகைகள், வீட்டிலிருந்து அலுவலகத்திற்கும், அலுவலகத்திலிருந்து வீட்டுக்குமாறுன போக்குவரத்து வசதி உள்ளிட்ட சில காரணங்களால் பிபிஓ துறை பக்கம் பெண்களின் ஈடுபாடு அதிகரித்துள்ளதாம்.
இதுதவிர சுகாதாரத் திட்டங்கள், விழிப்புணர்வுத் திட்டங்கள், சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடமிருந்து எந்தவிதமான தொல்லையும் வராதது போன்றவையும் இந்தத் துறை பக்கம் பெண்கள் அதிகம் திரும்ப முக்கிய காரணமாகும்.
இதுகுறித்து நாஸ்காம் துணைத் தலைவர் சங்கீதா குப்தா கூறுகையில், இந்திய பிபிஓ துறை பிற துறைகளை விட பெண்களுக்கு அதிக கெளரவத்தையும், மரியாதையையும் அளிக்கும் துறையாக உள்ளது.
பிபிஓ துறையில் பெண்களின் பங்குதான் முக்கியமானது, மகத்தானது. அவர்களின் ஈடுபாடும், வேலைத்திறமையும் மிகச் சிறப்பாக உள்ளது. எந்தவித நிலையையும் எளிதில் சமாளிப்பவர்களாக பெண்கள் உள்ளனர் என்றார்.
இந்த சர்வே சில பரிந்துரைகளையும் அளித்துள்ளது. பெண் ஊழியர்களின் தொழில் திறனை அதிகரிக்கும் வகையிலான பயிற்சிகள், பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் அம்சங்கள், வரிச் சலுகைகள் உள்ளிட்டவை அதில் சில.
மேலும், வேறு எந்த நாட்டையும் இந்திய பிபிஓ துறையில்தான் அதிக அளவிலான பெண்கள் இருப்பதாகவும், இதுவே இந்திய பிபிஓ துறையின் வளர்ச்சிக்கு ஓரளவு முக்கிய காரணம் என்றும் அதில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications