'அணு': அத்வானி-நாயுடுவை சந்தித்த யுஎஸ் தூதர்
டெல்லி: அடுத்து எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பது தெரியாத நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட்டர் பர்லே, பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை சந்தித்து அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேசியுள்ளார்.
இந்தியத் தேர்தலை உலகமே கண்காணித்து வருகிறது. அமெரிக்காவும் தேர்தலுக்கு பின் ஆட்சிக்கு யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற குழப்பத்தில் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி தொடருமா இல்லை, பாஜக ஆட்சிக்கு வருமா என யோசித்து வருகிறது.
ஒருவேளை பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால் அதன் பிரதம வேட்பாளர் அத்வானி பிரச்சாரத்தின் போது கூறியது போலஅணுசக்தி ஒப்பந்தத்தில் எதாவது மாற்றம் செய்துவிடுவோரோ என்றும் அஞ்சுகிறது.
இதையடுத்து அத்வானியை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பீட்டர் பர்லே சந்தித்தார். அப்போது அவர் அத்வானியிடம் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அவரது கருத்தை கேட்டறிந்திருந்ததாகத் தெரிகிறது.
இது குறித்து மூத்த பாஜக தலைவர் வெங்கய்யா நாயுடு கூறுகையில்,
இது ஒரு வழக்கமான சந்திப்பு தான். அமெரிக்கத் தூதர் அணுசக்தி ஒப்பந்தம், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் குறித்து அத்வானியுடன் பேசினார். அவர் இது குறித்து தொடர்ந்து முக்கிய இந்திய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பாகிஸ்தானில் தற்போதிருக்கும் நிலவரம் குறித்தும் பேசினார். அதே சமயத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அணுசக்தி ஒப்பந்தத்தை ஒரேயடியாக ரத்து செய்ய மாட்டோம். அதில் சில திருத்தங்களை மட்டும் செய்யச் சொல்வோம் என்றார் வெங்கய்யா நாயுடு.
இந்நிலையில் அத்வானியை சந்திப்பதற்கு முன் அமெரிக்க தூதர் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவையும், பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவர் சிரஞ்சீவியையும் சந்தித்துள்ளார்.
இடதுசாரிகள் தலைமையில் ஆட்சி வந்துவிடுமோ என்று அஞ்சும் அமெரிக்கா அதைத் தவிர்க்க இடதுசாரிகளின் மூன்றாவது அணியில் உள்ள நாயுடுவை, பாஜக கூட்டணிக்கு ஆதரவு தருமாறு கோரியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்க தூதர் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், இந்தியாவின் ஜனநாயக தேர்தல் முறையில் நாங்கள் ஒரு போதும் தலையிட மாட்டோம். இது வழக்கமான சந்திப்பு தான் என்றார்.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவை அமெரிக்க தூதர் சந்தித்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் பிரகாஷ் கரத் கூறுகையில், நாயுடுவிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். அந்த சந்திப்பில் சொல்லி கொள்ளும் அளவுக்கு பெரிதாக எதுவுமில்லை என்றார்.