அடையாள அட்டை இருக்கு...ஆனா ஓட்டு இல்லை
நெல்லை: நெல்லை தொகுதியில் அடையாள அட்டை வைத்திருந்த பலருக்கு ஓட்டு இல்லாமல் போனது. அதே சமயத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களில் சிலருக்கு ஓட்டு இருந்தது. சிலருக்கு ஓட்டு இல்லை. இதையடுத்து வாக்காளர்களும் பலரும் புலம்பியபடி வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறினர்.
தேர்தலில் கள்ளஓட்டு, ஆள்மாறட்டம் போன்றவற்றை ஓழிப்பதற்காக தேர்தல் ஆணையம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் முறையை கொண்டு வந்தது.
இந்நிலையில் ஒரு வாக்களாருக்கு பல தொகுதிகளில் வாக்குரி்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு இடத்துக்கு மேல் வாக்குரிமை பெற்றுள்ளவர்களை நீக்குவதற்காக தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கடந்த நவம்பர் மாதம் மேற்கொண்டது.
அப்போது வாக்காளர் பட்டியல் முழுமையாக திருத்தப்பட்டது. மேலும் அந்த வாக்காளர் அந்த வீட்டில் தான் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக அவரிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. அப்படி இல்லாதவர்களின் பெயர்கள் மற்றும் வெளியூரில் வசிப்பவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதன் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் தாயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இதில் ஒரே ஊருக்குள் வீடு மாறியவர்கள் போன்றவர்களின் வாக்குகளும் நீக்கப்பட்டுவிட்டன. இதற்கு வீடு மாறுபவர்கள் தங்கள் வீட்டு முகவரியை தங்களது ரேஷன் கார்டில் உடனடியாக மாற்றாததே காரணம் என தெரிகிறது.
இந்நிலையி்ல் நேற்று நடந்த தேர்தலில் நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஓட்டு போட வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு அவர்களது பெயர் பட்டியலில் இல்லை என்பதை கண்டு அதிர்ந்து போயினர். கடந்த தேர்தலில் ஓட்டு போட்டேன். இந்த தேர்தலில் வாக்கு இல்லையே என பலர் புலம்புவதை காண முடிந்தது.
சில இடங்களில் கணவருக்கு ஓட்டு இருந்தது. ஆனால், மனைவிக்கு ஓட்டு இல்லை. சில இடங்களில் மகன்கள் மற்றும் மகளுக்கு ஓட்டு இருந்தது. அவர்களது பெற்றோருக்கு ஓட்டு இல்லை. இப்படி பல குளறுபடி ஏற்பட்டதால் பலரும வாக்களிக்க முடியாமல் புலம்பியபடி வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறினர்.












Click it and Unblock the Notifications