திமுகவினருடன் மோதல்-கொங்கு பேரவை தொண்டர் பலி!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுகவினருடன் ஏற்பட்ட மோதலின் போது படுகாயமடைந்த கொங்கு பேரவை தொண்டர் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட கெங்கவலி சட்டசபை தொகுதியில் உள்ள நாவலூர் தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடிக்கு நேற்று திமுக தொண்டர் ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓட்டளிக்க வந்துள்ளார். இதனால் அவருக்கு அனுமதி வழங்க கூடாது என கொங்கு முன்னேற்ற பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
வாக்கு சாவடியில் இருந்து வெளியேறிய அந்த நபர் அப்பகுதி ஊராட்சி தலைவரும், திமுக பிரமுகருமான சுமதி இந்திரஜித்தை சந்தித்துள்ளார். இதையடுத்து சுமதி இந்திரஜித், அவரது கணவர் இந்திரஜித் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு சென்று கொங்கு முன்னேற்ற பேரவையினருடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் நேற்று தகராறு ஏற்பட்டது. சில இடங்களில் இரு கட்சியினரும் மாறி மாறி கல்வீசி கொண்டனர். கொங்கு பேரவையின் கொடி கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.
இதில் மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்ப்டடது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஒரு வழியாக வாக்குப் பதிவு முடிந்தது. இதையடுத்து அதிகாரிகள் மின்னணு இயந்திரத்தை வாக்குச் சாவடிக்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த கொங்கு முன்னேற்ற பேரவையினர் மின்னணு இயந்திரங்களை வாகனத்தில் ஏற்றவிடாமல் தடுத்தனர்.
இதையடுத்து கெங்கவல்லி சட்டசபை தொகுதி தேர்தல் உதவி அலுவலர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொங்கு முன்னேற்ற பேரவையினர் அவர்களிடம் கூறுகையில்,
ஊராட்சித் தலைவர் சுமதி இந்திரஜித் உள்ளி்ட்ட திமுகவினர் ஐந்து பேரை கைது செய்ய வேண்டும். திமுகவினரால் எடுத்துச் செல்லப்பட்ட வாகனங்களை திருப்பி தர வேண்டும். அவர்களால் வெட்டி சாய்க்கப்பட்ட கொடிக்கம்பங்கள் சீரமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். அதுவரை மின்னணு இயந்திரத்தை கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
சுமார் நீண்ட நேரம் வரை இப்பிரச்சினை நீடித்ததால் அதிகாரிகள் என்ன செயவதென்று அறியாமல் விழி பிதுங்கி நின்றனர். பின்னர் ஒரு வழியாக கூடுதல் போலீசார் வந்து இரவு 1 மணிக்கு மி்ன்னணு இயந்திரங்களை எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று நடந்த மோதலில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கொங்கு முன்னேற்றப் பேரவை தொண்டர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications