பாதுகாப்பு வளையப் பகுதியில் கடும் போர் - பெரும் உயிரிழப்பு அபாயம்!
இன்னும் 48 மணி நேரத்தி்ல விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விடுவார்கள் என இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளதால், தமிழர்கள் உள்ள பகுதியை ஒட்டுமொத்தமாக இலங்கை ராணுவம் தாக்கி அழிக்க முயலுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இன்று அதிகாலை முதல் பாதுகாப்பு வளையப் பகுதி முழுவதிலும் இருந்து கரும்புகை வெளிவந்த வண்ணம் உள்ளது. பாதுகாப்பு வளையப் பகுதியை நோக்கி கனரக பீரங்கிகளால் தொடர்ந்து இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
மிகக் குறுகிய கடற்பரப்பான பாதுகாப்பு வளையப் பகுதியை முழுமையாக அழிக்கும் வகையில் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் பகுதியில் உள்ள முக்கால்வாசி அப்பாவி மக்கள் பதுங்கு குழிக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். தற்போது நடந்து வரும் மிகத் தீவிரமான தாக்குதலைப் பார்க்கும்போது நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்குள் இந்தப் பகுதியை கைப்பற்றும் முடிவில் ராணுவம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வந்த ஒரே ஒரு தற்காலிக மருத்துவமனையும் தற்போது சேதமடைந்து, செயலிழந்து கிடக்கிறது. எனவே காயமடைந்தோருக்கு தற்போது சிகிச்சைக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டன.
48 மணி நேரத்தில் புலிகள் அழிக்கப்படுவர் ..
இதற்கிடையே, இலங்கை அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விடுதலைப் புலிகளை இன்னும் 48 மணி நேரத்திற்குள் அழித்து விட வேண்டும் என அதிபர் ராஜபக்சே உறுதி பூண்டுள்ளார். அதற்கேற்ப ராணுவம் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புலிகள் வசம் உள்ள அனைத்து அப்பாவி மக்களும் மீட்கப்பட்டு விடுவார்கள்.
விடுதலைப் புலிகள் வசம் உள்ள அனைத்துப் பகுதிகளும் மீட்கப்படும் எனவும் அதிபர் உறுதியுடன் உள்ளார் என்றார்.
நேற்று இரவே விடுதலைப் புலிகள் தற்போது முடக்கப்பட்டுள்ள 1.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியைச் சுற்றிலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை இலங்கை ராணுவம் குவித்து விட்டது.
பீரங்கிகள் உள்ளிட்ட அனைத்து கன ரக ஆயுதங்களும் தாக்குதலில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
புலிகள் வசம் தற்போது 1500 வீரர்கள் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்னும் இப்பகுதியில்தான் இருக்கிறாரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.