மன்மோகன் சிங்கே மீண்டும் பிரதமராவார்-காங்.
டெல்லி: பிரதமராக மீண்டும் மன்மோகன் சிங்கே பதவியேற்பார் என காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி, மீண்டும் மன்மோகன் சிங்கே பிரதமர் ஆவார். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத் தலைவர். எனவே அவர் எதிர்கால பிரதமராக இருப்பார்.
மன்மோகன் சிங்கைத்தான் நாங்கள் பிரதமர் வேட்பாளராக அறிவித்தோம். எனவே திட்டமிட்டபடி அவரே பிரதமராக பதவியேற்பார்.
காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த வெற்றிக்கு மூன்று முக்கிய காரணங்கள். ஒன்று பிரதமர் தலைமையிலான அரசு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவரான சோனியா காந்தியின் தலைமை, ராகுல் காந்தியின் சிறப்பான பிரசாரம்.
இடதுசாரிகளுக்கு கடந்த முறையை விட இம்முறை குறைந்த அளவிலான சீட்களே கிடைக்கும். அவர்களுடனான உறவை நாங்கள் இன்னும் முறிக்கவில்லை. அவர்களாகத்தான் உறவை முறித்துக் கொண்டனர் என்றார் அவர்.