குட்டிக் கட்சிகளுக்கு வலை வீச்சை தொடங்கியது காங்.
டெல்லி: தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட தெளிவாகி விட்டதால், அடுத்த கட்ட நடவடிக்கையில் காங்கிரஸ் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவைப்படும் ஆதரவுக்காக குட்டிக் கட்சிகளையும், சுயேச்சைகளையும் வளைத்துப் பிடிக்க கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்களுக்கு வேலை கொடுத்துள்ளார் தலைவர் சோனியா காந்தி.
குறிப்பாக மூன்றாவது அணியைச் சேர்ந்த முக்கிய கட்சிகள், 2 அல்லது 3 எம்.பிக்கள் வரை பெறப் போகும் கட்சிகள் உள்ளிட்டோரையும், சுயேச்சைகளையும் வளைத்துப் பிடிக்கும் பணி இந்தத் தலைவர்களுக்கு தரப்பட்டுள்ளது.
முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்பே ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்ள காங்கிரஸ் தீர்மானித்து களம் இறங்கியுள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் நிம்மதியாக திமுக கூட்டணிக்கு 27 இடங்கள் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.
அதேபோல ஆந்திராவில் பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் ஆதரவைப் பெறவும் காங்கிரஸ் முயற்சிகளில் இறங்கியுள்ளது. தற்போது சிரஞ்சீவி, நான்காவது அணியில் உள்ளார். நான்காவது அணி கடைசியாக காங்கிரஸுக்கே ஆதரவு தரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் சிரஞ்சீவி கட்சியின் ஆதரவும் காங்கிரஸுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல ஒரிசாவில் பிஜூ ஜனதாதளத்தின் ஆதரவைப் பெறுவற்காக, முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் பேசுவதற்காக கமல்நாத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நான்காவது அணியை அப்படியே காங்கிரஸ் அணிக்குக் கொண்டு வரும் வேலை அகமது படேலிடம் தரப்பட்டுளளதாம். ஏற்கனவே அவர் லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், அமர்சிங்குடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கி விட்டார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தற்போது கிட்டத்தட்ட 250 தொகுதிகளில் வெல்லும் நிலை காணப்படுகிறது. ஆட்சி அமைக்கத் தேவையான எண்ணிக்கை 272 ஆகும். எனவே இன்னும் கிட்டத்தட்ட 30 எம்.பிக்கள் வரை தேவைப்படுவர். இதை எளிதில் திரட்டி விட முடியும் என்ற நம்பிக்கையில், காங்கிரஸ் உள்ளது.