'பிரதமர்கள்'...கலகலத்துப் போனது 3வது அணி!!
டெல்லி: மூன்றாவது அணி என்ற பெயரில் உருவான கூட்டணி படுதோல்வியடைந்து தேசிய அளவில் 3 வது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது. மேலும் இவர்களது ஆதரவில்லாமலேயே மத்தியில் காங்கிரஸ் கூட்டணியால் ஆட்சியமைக்க முடியும் நிலையும் உருவாகிவிட்டதால் இந்தக் கூட்டணிக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் தேர்தலோடு கரைந்து போய்விட்டது.
இந்தக் கூட்டணியில் இணைந்து மாயாவதி, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் பிரதமர் பதவிக்கு கண் வைத்தனர். அதே போல காங்கிரஸ், பாஜக கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காது.. எனவே மூன்றாவது அணியில் இணைந்து காங்கிரஸ் அல்லது பாஜகவின் ஆதரவைப் பெற்று எப்படியாவது பிரதமராகிவிடலாம் என்ற கனவில் இருந்தனர் சரத் பவார், நிதிஷ் குமார் போன்றவர்கள்.
மேலும் எல்லோரும் சேர்ந்து காம்ப்ரமைஸ் கேன்டிடேட்டாக தன்னையே மீண்டும் பிரதமகாக்குவார்கள் என்ற ஆசையில் இருந்தார் தேவ கெளடா.
ஆனால், இந்தக் கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த இடதுசாரிகளுக்கு தேசிய அளவில் பெரும் தோல்வி கிடைத்துவிட்டது.
அதே போல மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 40 இடங்களைப் பிடிக்கப் போகிறது... அவர் தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்றெல்லாம் செய்திகளைப் பரப்பினர். ஆனால், அவரால் 24 இடங்களே வெல்ல முடிந்துள்ளது.
அதே போல ஓவராக எஸ்டிமேட் செய்யப்பட்டவர் ஜெயலலிதா. இவரது கூட்டணி 30 முதல் 35 இடங்களை வெல்லப் போவதாகவும் அவரும் பிரதமர் பதவி கோதாவில் குதிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அதிமுக கூட்டணிக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
மேலும் இந்தக் கூட்டணியில் இருந்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி பாஜகவுக்குத் தாவிவிட்டது. மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரசுக்குத் தாவ தயாராகிவிட்டது.
வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்றுள்ள தெலுங்கு தேசம் அடுத்து என்ன செய்வது என்று கையை பிசைந்தபடி தெரியாமல் நிற்கிறது.












Click it and Unblock the Notifications