அமைச்சரவை கூட்டம்-லாலுவுக்கு சோனியா அழைப்பு
டெல்லி: டெல்லியில் நாளை நடக்கவிருக்கும் மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளர் லாலு பிரசாத் யாதவுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு மீண்டும் மத்திய அமைச்சர் கிடைக்கும் என தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தலைவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 261 தொகுதிகளில் வென்றுள்ளது. அவர்களுக்கு ஆட்சியமைக்க இன்னும் 12 தொகுதிகள் மட்டுமே தேவைப்படுகிறது.
ஆனால், தேர்தலுக்கு முன்னால் காங்கிரசை கடைசி நேரத்தில் உதாசனப்படுத்தி கூட்டணியை முறித்து கொண்ட லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளத்துக்கு பீகாரில் சரியான அடி கிடைத்துள்ளது.
கடந்த முறை காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்த அவர் 22 தொகுதிகளில் வென்று, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முக்கியமான இடத்தை பிடித்திருந்தார். இதனால் அவருக்கு முக்கியமான ரயில்வே துறை அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அவரது கட்சிக்கு வெறும் 4 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதையடுத்து தேசிய அரசியலில் அவரது முக்கியத்துவம் சுத்தமாக குறைந்துவிட்டது.
மேலும், அவர் தேர்தலுக்கு முன்னாள் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்து கொண்டதில் இருந்து மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டத்துக்கு போகாமல் இருந்தார். இந்நிலையி்ல நேற்று மாலை லாலுவுடன் தொலைபேசியில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரை அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க அழைத்துள்ளார்.
இதையடுத்து லாலு இன்று டெல்லி கிளம்புகிறார். இந்த செய்திகளை லாலுவின் உதவியாளர் போலா யாதவ் உறுதி செய்துள்ளார். இதனால் லாலுவுக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையி்ல் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், கடந்த முறை அவர் வைத்திருந்த ரயில்வே அமைச்சர் பதவியை இம்முறை திமுக கேட்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அவருக்கு வேறு எதாவது அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என தெரிகிறது.
தவறு செய்துவிட்டேன்...
இந்நிலையில் லாலு கூறுகையில்,
காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் போட்டியிட்டது தான் நாங்கள் செய்த தவறு. தற்போது அதை உணர்ந்து கொண்டேன். மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்க இருப்பது மகிழ்ச்சியை தருகிறது என்றார் லாலு.












Click it and Unblock the Notifications