இலங்கை ராணுவம் வெறித் தாக்குதல்-ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலி
வன்னி: முல்லைத்தீவில் உள்ள மிகக் குறுகிய பகுதியில் ராணுவம் நாலாபுறமும் சூழ்ந்துகொண்டு மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் நேற்று மட்டும் 3000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிகிறது. எங்கு பார்த்தாலும் பிணக் காடாக இருக்கிறது. இன்று காலை முதல் விமானங்களிலிருந்து குண்டு வீசித் தாக்கி வருகிறது இலங்கை விமானப்படை.
பெருமளவுக்குக் குவிந்து கிடக்கும் உடல்களின் மத்தியிலேயே மிச்சம் மீதம் உள்ள மக்கள் இருக்க வேண்டிய அவலம் உள்ளது.
தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதால், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவும் முடியாமல், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவும் முடியாத நிலை உள்ளது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த மருத்துவமனை மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தையும் இலங்கைப் படையினர் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், அங்கு யாருக்கும் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நோயாளிகள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
படையினர் முள்ளிவாய்க்கால் பகுதியை நான்கு முனையிலும் சுற்றிவளைத்து தாக்கி வருகின்றனர். நேற்று மட்டும் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தொடர்ந்து நாலாபுறமும் தாக்குதல் நடந்து வருகிறது. இடைவிடாமல் பீரங்கிகளால் தாக்கி மக்களை கொன்று குவித்து வருகிறது இலங்கைப் படை.
தாக்குதலிலிருந்து தப்ப பதுங்கு குழிகளுக்குள் மக்கள் பதுங்கியுள்ளனர். மருத்துவர்களும், தொண்டு நிறுவனத்தினரும் இதே பதுங்கு குழிகளுக்குள் தஞ்சமடைந்துள்ளனர்.
குடிநீர், உணவு என எதுவுமே இல்லாமல் மக்கள் பேரவலத்தை சந்தித்து வருகின்றனர்.
இதற்கிடையே, முள்ளிவாய்க்கால் பகுதியில் பணிபுரிந்த டாக்டர்கள் சத்தியமூர்த்தி, வரதராஜா ஆகியோரும், அரசு அதிகாரி பார்த்தீபன் ஆகியோர் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போய் விட்டனர்.
அதேசமயம், காயமடைந்த மக்களுக்கு உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை அளித்து வரும் டாக்டர் செல்வராஜா தாக்குதலில் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடந்து வரும் பகுதியில் இன்று காலை முதல் மீண்டும் குண்டு மழை பொழிந்து வருகிறது இலங்கை விமானப்படை. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் பெரும் அபாயம் நிலவுகிறது.
கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்தக் களறியாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் துடிதுடித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முள்ளிவாய்க்கால் பகுதி முழுவதும் மரண ஓலமாக இருப்பதாகவும், படுகாயமடைந்தவர்களை மீட்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications