அழகிரி-கனிமொழிக்கு பதவி?-பாலுவுக்கு சபாநாயகர் பதவி கோரும் திமுக!
டெல்லி: மத்திய அமைச்சரவையில் திமுக சார்பில் அழகிரிக்கும், கனிமொழிக்கும் மட்டுமே கேபினட் பதவி தரப்படும் என்று தெரிகிறது.
இவர்களோடு ராசாவுக்கும் சேர்த்து 3 கேபினட் பதவிகளை திமுக கோருவதாகவும் ஆனால், திமுகவுக்கு 2 பதவிகள் மட்டுமே தர முடியும் என்று கூறி வருவதாகவும் தெரிகிறது.
கடந்த முறை திமுக சார்பில் 3 கேபினட் அமைச்சர்கள் இருந்தனர். 4 இணையமைச்சர்கள் இருந்தனர்.
இந் நிலையில் இம்முறை டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி தர திமுக தயாராக இல்லை என்று தெரிகிறது.
அவருக்கு சபாநாயகர் பதவி தர வேண்டும் என்று திமுக கோருவதாகத் தெரிகிறது. ஆனால், அந்தப் பதவியை காங்கிரஸ் தானே வைத்துக் கொள்ள விரும்புவதாகவும், அதை மூத்த தலைவரான சுசில் குமார் ஷிண்டேவுக்குத் தர முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே போல தயாநிதி மாறனுக்கும் அமைச்சர் பதவி தரப்படாது என்று தெரிகிறது.
திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், ஹெலன் டேவிட்சன் ஆகியோருக்கு இணையமைச்சர் பதவி தரப்படலாம் என்றும் தெரிகிறது.
அதே நேரத்தில் திமுகவுக்கு இம்முறை கப்பல் போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற துறைகள் தரவும் காங்கிரஸ் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் கருணாநிதி சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற திமுக தலைவர் பாலு:
முன்னதாக நாடாளுமன்றத் திமுக தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டார்.
சென்னையில் இன்று திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் இந்தத் தகவலை முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான திமுக கட்சி பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இரு அவைகளின் கட்சிக் குழுக்களின் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications