இலங்கை-சேது: காங்கிரசுக்கு திமுக நெருக்குதல்
சென்னை: மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் மீண்டும் பங்கேற்கவுள்ள திமுக இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைப்பது, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும் என நெருக்கடி தர ஆரம்பித்துள்ளு.
இன்று ஐக்கிய முற்போக்குக் கூ்டடணி அரசில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்க முதல்வர் கருணாநிதிக்கு அங்கீகாரம் அளித்து திமுக தலைமை செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.
இதில் இடம் பெறும் திமுக, எத்தனை அமைச்சர் பதவிகளைக் கேட்பது, எந்தெந்த துறைகளைக் கேட்பது என்பது குறித்து விவாதிக்க திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் இன்று நடந்தது.
இக்கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது.
கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்த இக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் தவிர வெற்றி பெற்ற எம்பிக்களும், தோல்வியடைந்த திமுக வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்க கட்சித் தலைவர் முதல்வர் கருணாநிதிக்கு அங்கீகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். அப்பாவி தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். பிரச்சினைக்கு சுமூகமான முறையில் பேச்சுநடத்தி தீர்வு காண வேண்டும் எனவும் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருணாநிதி நாளை டெல்லி பயணம்:
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுகவுக்கான அமைச்சர் பதவி குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.
நாளை நான் டெல்லி செல்கிறேன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்துகிறேன்.
சேது நிச்சயம் நிறைவேறும்...
சேது சமுத்திரத் திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றியே தீருவோம்.
அதேபோல இலங்கையில் அங்குள்ள தமிழ் மக்கள் சம உரிமைகளுடனும், சம அந்தஸ்துடனும், அமைதியாக வாழ வழி செய்ய மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி அங்கு அமைதி உடன்பாடு ஏற்பட பாடுபடுவோம் என்றார் கருணாநிதி.
முன்னதாக இன்று பிற்பகலில் முதல்வர் கருணாநிதி மற்றும் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் டெல்லி செல்ல இருந்தனர். ஆனால், அந்தத் திட்டம் மாற்றப்பட்டுவிட்டது.