வாந்தி, பேதி-50 பேர் மருத்துவமனையில் அனுமதி
பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மக்கள் வாந்தி-பேதி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள பூலாங்குளம் கிராமம், பால்பண்னை தெருவை சேர்ந்த சிலருக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் அதே தெருவை சேர்ந்த மேலும் 50 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு, கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் தென்காசி, ஆலங்குளம், பாவூர்சத்திரம் தனியார் மருத்துவமனையிலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர் கூறுகையில்,
எங்கள் தெருவில் குடிநீர் தொட்டி சுகாதாரமான இடத்தில் இல்லை. அதில் இருந்து வினியோகிக்கப்படும் தண்ணீரை பால்பண்ணை தெருவை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எனது மனைவி வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டார். நேற்று எனக்கும் வாந்தி பேதி ஏற்பட்டது என்றார்.
பூலாங்குளத்தில் கடந்த முறை பருவ மழையின்போது இதே ஊரை சேர்ந்த குழந்தைகள் உள்பட பலர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர். தற்போது கோடையிலும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த திடீர் வாந்தி, பேதிக்கு என்ன காரணம் என்பது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications