திருவண்ணாமலையில் ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு
திருவண்ணாமலை: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், இலங்கை ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவி திருவண்ணாமலைக்கு அருகே கொளுத்தப்பட்டது.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவம் சுட்டு கொன்றது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புக்கு துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில இடங்களில் பஸ்கள் உடைக்கப்பட்டன. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் நேற்று இரவு 9.00 மணிக்கு மேல் பேருந்துகள் ஓடவில்லை.
இந் நிலையில் இன்று காலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செல்லகுப்பம் காலனியில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியுடன் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த சாலை ஒன்றில் அவரது கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி, அமைதியாக கலைந்து போக செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.