இலங்கையைப் பழி தீர்ப்போம்-கனடா தமிழர்கள் ஆவேசம்
டொரன்டோ: விடுதலைப் புலிகளை ஒடுக்கி விட்டதால் எல்லாம் முடிந்து விட்டதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் இப்போது எங்களது போராட்டத்தில் புதிய அத்தியாயம் தொடங்கி விட்டது. இலங்கையை பழி தீர்ப்போம். ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக பெரும் போராட்டத்தில் குதிப்போம் என்று கனடா தமிழர் காங்கிரஸ் என்ற அமைப்பு கூறியுள்ளது.
உலகின் மிகப் பெரிய தமிழர் அமைப்பு கனடா தமிழர் காங்கிரஸ். இந்த அமைப்பின் தலைவர் டேவிட் பூபாளப் பிள்ளை கூறுகையில்,இதற்குக் காரணமான இலங்கை அரசை நாங்கள் பழி தீர்ப்போம். ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டத்தை நடத்தப் போகிறோம். அதுகுறித்து நாளை (இன்று) முடிவெடுக்கப் போகிறோம் என்று தெரிவித்தனர்.
அமைப்பின் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான டேவிட் பூபாளப்பிள்ளை கூறுகையில், இலங்கைப் படைகள் தொடர்ந்து அப்பாவி மக்களைக் கொன்று வருகின்றன. போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு உலகுக்குத் தெரிவித்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல.
கொழும்பில் உள்ள தமிழர்கள் சிங்களக் காடையர்களால் இழிவாகவும், கேவலமாகவும் பேசி சித்திரவதைக்குள்ளாகியுள்ளனர். அசிங்கமாக தாங்கள் நடத்தப்படுவதாக அவர்கள் எங்களுக்குத் தொலைபேசி மூலம் கூறி கதறி அழுகின்றனர்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு சிங்களக் கொடிகளுடன் செல்லும் சிங்கள இனவெறிக் கூட்டம், வீடு வீடாக சென்று தமிழர்கள் தங்களது வீடுகளில் சிங்களக் கொடியை ஏற்ற வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.
சிங்கள கும்பல் ஒன்று இந்து துறவி ஒருவரை அடித்து இழுத்துச் சென்று தங்களுடன் கட்டாயப்படுத்தி நடனமாட வைத்துள்ளது. எங்கே போய் விட்டது நாகரீகம்.
எனது வார்த்தையைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த திங்கள்கிழமை, எங்களது சுதந்திரப் போராட்டத்தின் புதிய அத்தியாயம் தொடங்கிய நாள்.
சிங்கள தேசம் (இலங்கை) சுதந்திரமடைந்த இந்த 60 ஆண்டுகளின் முதல் 35 ஆண்டுகள் நாங்கள் அமைதியான முறையில் காந்தீய வழியில் போராடினோம். ஆனால் எங்களுக்குப் பலன் கிடைக்கவில்லை.
2வது கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று வரை 25 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டது. அதில், உலக அளவில் எங்களது லட்சியத்தைக் கொண்டு செல்ல அது உதவியது.
இன்று முதல் 3வது கட்டப் போராட்டத்தை நாங்கள் தொடங்குகிறோம். எங்களது சுதந்திரத்தை நாங்கள் இந்த இறுதிக் கட்டத்தில் அடைந்தே தீருவோம்.
உலகெங்கும் உள்ள தமிழர்களைத் திரட்டப் போகிறோம். எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தப் போகிறோம். நாங்காள்தான் இப்போது ஈழத் தமிழர்களின் ஒரே குரல்.
எங்களது போராட்ட வழிகளை நாங்கள் சர்வதேச சமுதாயத்துனும், பிற தமிழ் அமைப்புகளுடனும் இணைந்து திட்டமிடவுள்ளோம்.
தென் ஆப்பிரிக்க நிறவெறியை ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் உடைத்தெறிந்தது. சர்வதேச சமுதாயம் அதற்கு உதவியது. அதேபோல இலங்கையில் நிலவும் இனவெறியையும் அதே சர்வதேச சமுதாயத்தின் உதவியுடன் நாங்கள் முறிப்போம்.
இலங்கையை பழி தீர்ப்போம். அவர்களை எப்படி மண்டியிட வைப்பது என்று எங்களுக்கு் தெரியும். சர்வதேச கோர்ட்டுக்கு அவர்களை இழுத்து வந்து நிறுத்துவோம். மேற்கத்திய நாடுகளையும், நிறுவனங்களையும் வலியுறுத்தி இலங்கையை புறக்கணிக்குமாறு செய்வோம்.
இலங்கை அரசு மீது எங்களுக்கு ஒரு விநாடி கூட நம்பிக்கை இல்லை. அதிகாரப் பகிர்வு என்று அவர்கள் 60 வருடங்களாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் எங்களுக்குத் துரோகம்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றார் பிள்ளை.
மேற்கத்திய நாடுகளிலேயே மிகப் பெரிய தமிழர் அமைப்பு மட்டுமல்லாது, பெரும் திரளான தமிழர்களைக் கொண்ட அமைப்பாகவும் கனடா தமிழர் காங்கிரஸ் விளங்குகிறது. இலங்கைக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தில் குதிக்கப் போவதாக அது கூறியுள்ளது, ஈழத் தமிழர் பிரச்சினையை உலக அளவில் பெரிதாக்க அது திட்டமிட்டுள்ளதாக கருத வைக்கிறது.