ரயில்வே துறை: திமுக-மம்தா மோதல்!
டி.ஆர்.பாலுவுக்கு ரயில்வே, தயாநிதி மாறனுக்கு மீண்டும் தொலைத் தொடர்புத்துறையை திமுக கோருகிறது.
அதே போல அழகிரிக்கு நலத்துறை கேபினட் அமைச்சர் பதவியைக் கோரும் திமுக, கனிமொழிக்கு இணையமைச்சர் பதவியைக் கோருகிறது.
முதலில் தயாநிதி, பாலுவுக்கு மீண்டும் அமைச்சர் பதவியை திமுக வழங்காது என்று கூறப்பட்டது. ஆனால், திமுகவின் அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்த முதல்வர் கருணாநிதி பாலுவுக்கு ரயில்வே, தயாநிதிக்கு தொலைத் தொடர்பு, அழகிரிக்கு நலத்துறை, ராசாவுக்கு நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை என 4 கேபினட் அமைச்சர் பதவிகளைக் கோரியதாகத் தெரிகிறது.
அதே போல தமிழகத்துக்குத் தேவையான மின் திட்டங்களைக் கொண்டு வரும் வகையில் இம்முறை மத்திய மின்துறை இணையமைச்சர் பதவியை கனிமொழிக்கு கோருவதாகவும் தெரிகிறது.
கோவை மண்டலத்தில் திமுகவுக்கு செல்வாக்கு சரிந்துள்ள நிலையில் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த நாமக்கல் எம்பி காந்தி செல்வனுக்கு இணையமைச்சர் பதவியும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இணையமைச்சர் பதவியும் கோருகிறது.
மம்தாவின் நாடகம்...
இதற்கிடையே தனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம் என்று கொல்கத்தாவில் நாடகம் போட்ட திரிணமூல் காங்கி்ரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தனது கட்சிக்கு 4 கேபினட் மற்றும் 4 இணையமைச்சர்களைக் கேட்டு காங்கிரசுக்கு திடீர் அதிர்ச்சி தந்துள்ளார்.
இதை காங்கிரஸ் ஏற்க மறுத்ததால் நேற்று டெல்லிக்கு வர வேண்டிய மம்தா வரவில்லை. இதையடுத்து அவரை அழைத்து வர 8 பேர் பயணிக்கும் செஸ்னா ரக தனியார் விமானத்தை சோனியா காந்தி கொல்கத்தாவுக்கு அனுப்பி, தாஜா செய்து வரவழைத்தார்.
மம்தாவும் தனக்கு ரயில்வே துறையையே கேட்பதாகத் தெரிகிறது.
19 எம்பிக்கள் கொண்ட மம்தா தான் இப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளில் காங்கிரசுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கட்சியாவார். இதனால் அவர் தனக்கே அதிக இடங்கள் தர வேண்டும் என்கிறார்.
18 எம்பிக்கள் கொண்ட (வேலூர் ஐயுஎம்எல் எம்பியையும் திமுக எம்பியாகவே கணக்கில் எடுக்கிறது கூட்டணி) திமுக தான் 3வது பெரிய கட்சியாகும். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவனையும் சேர்த்தால் தனது பலமும் மம்தாவுக்கு இணையாக 19 என்று காங்கிரசிடம் கூறியுள்ளது திமுக.
திமுகவுக்கு 2 தான்..
ஆனால், திமுகவும் மம்தாவும் 4 கேபினட் அமைச்சர்களைக் கேட்டாலும் அவர்களுக்கு தலா 3 கேபினட் பதவிகளையும் 3 இணையமைச்சர் பதவிகளையும் மட்டுமே தர காங்கிரஸ் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
ரயில்வேயை கேட்கவில்லை-மம்தா:
இதற்கிடையே இன்று நிருபர்களிடம் பேசிய மம்தா, ரயில்வேதுறையை எனக்கு வேண்டும் என்று கேட்டு காங்கிரசுக்கு நான் நெருக்கடி தரவில்லை என்றார். ஆனால், வெளியில் இப்படிப் பேசும் மம்தா, உள்ளே ரயில்வே துறையைக் கேட்டு காங்கிரசுக்கு குடைச்சல் தந்து வருவதாகத் தெரிகிறது.
அதே போல திமுகவும் ரயில்வே துறையை விட்டுத் தர மறுக்கிறது.
கருணாநிதி-காங் தலைவர்கள் சந்திப்பு, சிக்கல் தீரவில்லை:
இந் நிலையில் இன்று மாலை முதல்வர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத், அகமத் படேல் ஆகியோர் சந்தித்து திமுகவுக்கு ஒதுக்கப்படும் பதவிகள் எண்ணிக்கை, துறைகள் குறித்துப் பேசினர். ஆனால், அதில் முடிவு ஏற்படவில்லை.
இதையடுத்து மீண்டும் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.