மதுரை அருகே பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு-பயணிகள் காயம்
மதுரை: மதுரை அருகே அரசுப் பேருந்தின் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதில் பஸ்சில் இருந்த 3 பயணிகள் படுகாயமடைந்தனர்.
பிரபாகரன் குறித்த தகவலைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள், வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
நேற்று சென்னையில் அரசுப் பேருந்து தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இன்று மதுரை அருகே திருப்புவனத்தில் அரசுப் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதில் பயணிகள் 3 பேர் படுகாயமடைந்தனர்.
ஈரோட்டில் இருந்து ராமேசுவரத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த பஸ் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தபோது திடீரென பஸ் மீது மர்ம' நபர்கள் பெட்ரோல் குண்டை வீசினார்கள்.
இதில் பஸ்சின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின. அதிர்ஷ்டுவசமாக பஸ் தீப்பிடித்துக் கொள்ளாததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இருப்பினும், ராமநாதபுரம் பனக்குடியை சேர்ந்த சின்னையா (25), பனையூர் சாரதி, இலங்கேஸ்வரன் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
3 பேரும் மதுரை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் திருப்புவனத்தில் பரபரப்பு நிலவுகிறது.