சென்னை-செங்கோட்டை ரயிலில் கொள்ளை
நெல்லை: சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளிடம் கொள்ளையடித்துவிட்டு தப்பிய மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இதில் இரண்டு டயர் ஏசி பெட்டியில் பெர்த் எண் 13,14,15 ஆகியவற்றில் என்.சிவகுமார், மற்றும் அவரது குடும்பத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் 8,10,11 ஆகிய பெர்த் எண்களில் தென்காசிக்கு செல்லும் டாக்டர் கோதாண்டராமன் மற்றும் குடும்பத்தினர் இருந்தனர்.
இந்நிலையில் அந்த ரயில் அதிகாலை 4 மணி அளவில் மதுரை வந்தது. சிறிது நேரத்தில் கண்விழித்து பார்த்த சிவகுமார் தனது சூட்கேஸ் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்தார். அந்த பெட்டியில் சிவக்குமார் வைத்திருந்த சுமார் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ. 25 ஆயிரம் ரொக்க பணம் ஆகிய காணாமல் போனது.
இதையடுத்து அவர் கூப்பாடு போட்டுள்ளார். அவரை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தங்களது உடமைகள் சரியாக உள்ளதா என சோதித்துள்ளனர். அப்போது டாக்டர் கோதாண்டராமன் மனைவியின் வைரமூக்குத்தி உள்பட சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பொதிகை ரயில் தலைமை டிக்கெட் ரயில் பரிசோதகர் முத்தையா மதுரை ரயில்வே போலீசில் புகார் செய்தார்.
இந் நிலையில் அதே பெர்த்தில் பயணம் செய்த ஜாக்கியா, கிருஷ்ணநாதன் என்பவர்கள் செங்கோட்டைக்கு டிக்கெட் எடுத்துவிட்டு, பாதி வழியிலே இறங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் தான் கொள்ளையடித்திருக்க வேண்டும் என தெரிகிறது.
மேலும் கொள்ளை சம்பவம் மதுரை-திண்டுக்கல்லுக்கு இடையில் நடந்திருக்க வேண்டும் எனவும், அந்த கொள்ளை கும்பல் மதுரை வந்தவுடன் தப்பியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications