ஸ்ரீபெரும்புதூர்-ராஜீவ் நினைவிடத்தில் கூடுதல் பாதுகாப்பு
ஸ்ரீபெரும்புதூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 18வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்துக்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் படையின் கூடுதல் பிரிவுகள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ராஜிவ் நினைவிடத்தி்ற்கு அவரது நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இருப்பினும் சோனியாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ வருவார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதேசமயம், காங்கிரஸ் தலைவர்கள், நினைவிடத்திற்கு நாளை வரவுள்ளனர்.
இதையடுத்து ராஜீவ் காந்தி நினைவிடம் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
தங்கபாலு...
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு கூறுகையில்,
உலக அரசியல் அரங்கில் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாய் அன்றைக்கு இளமைத் துடிப்போடும், சர்வதேச தலைவர்களின் ஒருமித்த வாழ்த்துக்களோடும், வரவேற்போடும் உலா வந்த தலைவர் ராஜீவ் காந்தி இம்மண்ணில் பலியாகி உலகின் உன்னத தியாக வரலாறாக நிலைபெற்ற நாள் மே 21.
அவரது 18வது நினைவு தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.
நாளை தமிழகத்தின் அனைத்து மாவட்ட, நகர, வட்டார, கிராம காங்கிரஸ் கிளை நிர்வாகிகளும், தோழர்களும் அவரவர் பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படங்களை மலர்களால் அலங்கரித்து வைக்கவும், அவரது சிலைக்கு மலரஞ்சலி செலுத்தவும் வேண்டுகிறேன்.
மேலும் புனிததலங்களில் வழிபாடுகள் நடத்திடவும், அன்னதானம் வழங்கவும், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்திடவும் அந்தந்த பகுதியில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன்.
இன்றைய விஞ்ஞான இந்தியாவிற்கு அன்றைக்கே அடித்தளமிட்டு வெற்றிகண்ட வரலாற்று நாயகன் ராஜீவ் காந்தி.
அவரது வழித்தோன்றல் இந்தியாவின் கோடான கோடி இளைஞர்களின் நிகரற்ற தலைவர் ராகுல்காந்தியின் மக்கள் நலப்பணிக்கு ஒளி விளக்காய் அமைந்த தலைவர். அவரது தியாகத்தையும், சாதனைகளையும் மக்களின் இதயங்களுக்கு இட்டுச் செல்ல வேண்டிய கடமை காங்கிரஸ் ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும் உரித்தானது என்றார் தங்கபாலு.












Click it and Unblock the Notifications