அரைக் கம்பத்தில் தேமுதிக கொடி-விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையை கண்டித்து தமிழக மக்கள் மூன்று நாள் துக்கம் அனுசரிக்க வேண்டும் என்றும், தேமுதிக கட்சி கொடிகள் அடுத்த ஒரு வாரத்துக்கு அரைக் கம்பத்தில் பறக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் இருந்து வரும் செய்திகளை நம்ப முடியவில்லை. ஏனெனில் அச்செய்திகளை நினைத்தால் நெஞ்சம் நடுங்குகிறது. ஒரு புறத்தில் விடுதலைப் புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் உள்பட உயர்மட்ட தலைவர்களை கொன்றுவிட்டோம் என்று சிங்கள இன வெறி அரசு கொக்கரிக்கிறது.

மறுபுறத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் பிணங்களாக ஆங்காங்கே கிடக்கின்றனர் என்றும், பல்லாயிரக்கணக்கில் படுகாயமுற்று காடுகளில் அலைந்த வண்ணம் உள்ளனர் என்றும் செய்திகள் வருகின்றன.

ஹிட்லரை விட மோசமாக மகிந்தா ராஜபக்சே கடந்த 4 தினங்களில் மட்டும் சுமார் 4 ஆயிரம் தமிழர்களை சிங்கள ராணுவத்தின் மூலம் கொன்றுள்ளார். ஜனவரி 20ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை சுமார் 7 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நாவே புள்ளிவிவரம் தந்துள்ளது.

ஓநாய் அழுகிறது...

இந்த தமிழின படுகொலையை இன்றைய நவீன ஹிட்லர் மகிந்தா ராஜபக்சே அரசு நடத்திவிட்டு இலங்கையில் தீவிரவாதத்தை ஒழித்துவிட்டேன் என்றும், தமிழர்களை எதிர்த்த இறுதிக்கட்ட போர் முடிந்துவிட்டது என்றும் கூறுகிறது.

மேலும், தமிழர்களுக்கு தான் உரிமையும், பாதுகாப்பும் அளிக்கப்போவதாகவும், உலகத்தை ஏமாற்ற தம்பட்டம் அடித்துள்ளார். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான்.

உலக நாடுகள் மூலம் ஆயுதங்களை வாங்கி குவித்துக்கொண்டும் சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளின் துணை கொண்டும் விடுதலைப்புலிகளின் இயக்கத்தை அறவே அழித்துவிட்டோம் என்று இன்று ஆர்ப்பரிக்கின்றனர்.

சிங்களர்களோ தங்களது வீடுகளிலும், பொதுக்கட்டிடங்களிலும் சிங்கள அரசின் கொடிகளை ஏற்றியும், தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களில் தங்களது கொடிகளை வீசிக்கொண்டும், ஊர்தோறும், தெருக்கள் தோறும் ஊர்வலம் வருகின்றனர்.

நம் சார்பாக நடைபெறும் இந்திய அரசு இலங்கையில் நடந்த தமிழின படுகொலையை தடுக்க தவறியது தமிழர்களுக்கு செய்த மாபெரும் துரோகமாகும்.

ராஜபக்சே மண்ணை கவ்வுவார்...

அபலை தாய்மார்கள் இலங்கையில் அழுத கண்ணீர் வீண்போகாது. தமிழர்கள் சிந்திய ரத்தம் உறைந்து போய்விடாது. ஏனெனில் சிந்திய ரத்தம் என்றும் உறங்காது என்பது பொன்மொழி. கொல்லப்பட்ட தமிழர்களின் உயிர்கள் நிரந்தரமாக ஓய்ந்தும் விடாது.

சிங்கள விமானநிலையத்தில் மண்ணைத் தொட்டு வணங்கிய ராஜபக்சே மண்ணைக் கவ்வப்போவது காலத்தின் கட்டாயம். தனிநாடு என்ற கோரிக்கையில் போர் முறைகள் மாறலாம், ஆனால் போர் ஒயாது என்பதை சிங்கள இன வெறியர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.

இலங்கையில் நடந்த இந்த தமிழினப்படுகொலை கண்டித்து தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் வரும் மூன்று நாட்களை துக்க தினங்களாக கடைபிடிக்கக் கேட்டுகொள்கிறேன்.

தேமுதிகவின் சார்பில் தமிழினப் படுகொலையை கண்டித்து இன்று முதல் ஒரு வாரத்திற்கு கழக கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கட்சி தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+