குமரி-பல லட்சம் மதிப்புள்ள எரி சாராயம் பறிமுதல்
கன்னியாகுமரி: பூதப்பாண்டி அருகே பல லட்ச ரூபாய் மதிப்புள்ள எரி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்த மர்ம கும்பலை சேர்ந்த ஒருவனை கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் எரி சாராயம் கடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு மருத்துவமனைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் ஆரல்வாய்மொழி நெடுமங்காடு சாலையில் அதிவேகமாக டாடா சுமோ வாகனம் சென்றது.
போலீசார் அந்த வாகனத்தை துரத்தினர். அப்போது திட்டுவிளை விளாங்காடு ஜங்ஷன் அருகே டாடா சுமோவை நிறுத்தி விட்டு டிரைவர் மற்றும் அதிலிருந்தவர்கள் தப்பி ஓட துவங்கினர்.
இதையடுத்து போலீசார் அவர்களை தொடர்ந்து துரத்தி சென்றனர். அதில் ஒருவரை பிடித்து, கைது செய்தனர். அவர்கள் வந்த டாடா சுமோவை சோதனையிட்டதில் வாகனத்திற்குள் சுமார் 35 லிட்டர் எரி சாராயம் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் ஆகும்.
இதையடுத்து டாடா சுமோ வாகனம் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் வாகனத்திற்குள் பல்வேறு எண்கள் கொண்ட நம்பர் பிளேட்களும் காணப்பட்டது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்டவரிடம் டவுன் டிஎஸ்பி சிதம்பரநாதன் விசாரணை செய்து வருகிறார். இந்த வாகனம் எங்கிருந்து வருகிறது, எங்கே செல்கிறது என்பது பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தப்பியோடிவர்களை பூதப்பாண்டி போலீசார் தேடி வருகின்றனர்.