ராமேஸ்வரம் கோயில் தீர்த்த கட்டணம் திடீர் உயர்வு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்தக்கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்திலுள்ள புனித ஸ்தலங்களில் கருதப்படுவது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில். இந்த கோயிலில் தரிசனம் செய்ய தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகின்றனர்.
இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் அக்னிதீர்த்த கடற்கரையில் புனித நீராடி ராமநாதசுவாமி கோயிலுக்குள் அமைந்துள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
கோயிலுக்குள் உள்ள மகாலெட்சுமி தீர்த்தம் முதல் கோடி தீர்த்தம் வரையிலான 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவதற்கு ஒருவருக்கு கட்டணமாக இதுவரை ரூ. 7ம் தீர்த்தத்தை இறைத்து ஊற்றும் பணியாளர்களுக்கு சேவைக்கட்டணமாக ரூ.10ம் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தீர்த்தக் கட்டணத்தை தற்போது வாங்கும் தொகையில் 50 சதவீதம் கூடுதலாக கோயில் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
இதனால், கோயிலில் தீர்த்தக்கட்டணமாக நேற்று முதல் ரூ. 13ம், இறைத்து ஊற்றுபவர்களுக்கு சேவைக் கட்டணமாக ரூ. 12ம் சேர்த்து ஒருவருக்கு ரூ. 25 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
கோயில் நிர்வாகத்தின் இந்த செயல் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில் கோயில்கள் மனிதனை மகத்துவப்படுத்துவைகள். எனவே வியாபார நோக்கத்தோடு நிர்வாகம் செய்படுதவதை தவிர்த்து சேவை அடிப்படையில் பக்தர்களுக்கு அவைகள் இலவசமாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.