இன்று ராஜீ்வ் காந்தியின் 18வது ஆண்டு நினைவு நாள்- பலத்த பாதுகாப்பு
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 18வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்திற்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வந்த ராஜீ்வ் காந்தி மனித குண்டுக்கு பலியானார். இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 18 ஆண்டுகளாகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதாகவும், பிரபாகரன் உள்ளிட்ட அந்த அமைப்பின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் ஒரு விதமான இறுக்கமான சூழ்நிலை காணப்படுகிறது.
மாணவர்களும், தமிழ் அமைப்பினரும் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்திற்குப் பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இப்பகுதியில் உள்ளவர்கள் எந்தவித பதட்டமும் இன்றி தங்களது தினசரி வாழ்க்கையை தொடர்ந்து கொண்டுள்ளனர்.
ராதாகிருஷ்ணன் என்ற காங்கிரஸ் நிர்வாகி கூறுகையில், ராஜீவ் காந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால், ஈழம் இன்று உயரிய நிலைக்குப் போயிருக்கும். பிரபாகரனும், ஈழத்தை சுதந்திர நாடாக்கியிருப்பார். ஆனால் ராஜீவ் காந்தியும் இன்று இல்லை, பிரபாகரனும் இன்று இல்லை என்றார்.
இன்று முழுவதும் ராஜீவ் நினைவிடத்திற்கு காங்கிரஸார் பெருமளவில் வருவார்கள் என்பதால் இன்று முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.