காங்கிரஸ் மீது பரூக்-சரத் பவாரும் கோபம்
டெல்லி: திமுக மட்டுமல்லாமல் அதன் கூட்டணிக் கட்சிகளான சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவையும் தங்களை காங்கிரஸ் கேவலமாக நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளன.
தனக்கு மீண்டும் விவசாயத்துறை கேபினட் அமைச்சர் பதவியும், தனது எம்பி பிரபுல் படேலுக்கு மீண்டும் தனிப் பொறுப்புடன் கூடிய விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பதவியும் கோரினார் சரத் பவார். கூடவே இன்னொரு இணையமைச்சர் பொறுப்பும் கேட்டார். ஆனால், அதைத் தர காங்கிரஸ் மறுத்துவிட்டது. இதையடுத்து தருவதை ஏற்றுக் கொணடுவிட்டார்.
அதே போல பரூக் அப்துல்லாவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் உண்டா இல்லையா என்பதை இன்று காலை வரை காங்கிரஸ் தெரிவிக்கவில்லை.
இது குறித்து கோபமாக நிருபர்களிடம் பேசிய அவரது மகனும் காஷ்மீர் முதல்வருமான ஒமர் அப்துல்லா, பதவிக்காக இவர்களிடம் வந்து நிற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும். பதவி உண்டு, இல்லை என்பதை டீசண்டாக சொல்லியிருக்கலாம்.
ஆனால், கூட்டணிக் கட்சிகளை காக்க வைத்து, எதிர்பார்க்க வைத்து மூக்கறுக்கும் வேலையை காங்கிரஸ் செய்து வருகிறது. இதனால் எங்களுக்கு ஏதும் நஷ்டமில்லை. இவர்களை நம்பியும் நாங்கள் இல்லை என்றார்.
இந் நிலையில் இன்று மாலை மத்திய அரசு பதவியேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் பரூக் அப்துல்லா, தென் ஆப்பிரிக்கா கிளம்பிச் சென்றுவிட்டார்.
இப்போதைக்கு தமிழகத்திலோ, காஷ்மீரிலோ சட்டமன்றத் தேர்தல் இல்லை என்பதால் திமுக, தேசிய மாநாட்டுக் கட்சிகளை கேவலப்படுத்தும் காங்கிரஸ், மகாராஷ்டிரத்தைப் பொறுத்தவரை அங்கு மக்களவைத் தேர்தலில் பவார் கட்சியைவிட கூடுதல் இடங்களில் காங்கிரஸ் வென்றுள்ளது.
மேலும் அங்கு அடுத்த 6 மாதத்தில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் முடிவெடுத்துவிட்டது. இதனால் பவாருக்கு மூக்கறுப்பு செய்து வருகிறது.
அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் அடுத்த 6 மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அங்கு மம்தா பானர்ஜியை கையில் வைத்திருந்தால் தான் இடதுசாரிகளை தோற்கடிக்க முடியும். இதனால் தான் அவர் விஷயத்தில் மட்டும் காங்கிரஸ் வளைந்து போகிறது.
இதற்கிடையே பரூக் அப்துல்லாவிடம் பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் பேசியதாகவும், அவருக்கு அமைச்சர் பதவியை பின்னர் வழங்குவதாகவும், முதல் ரவுண்டில் அவருக்கு பதவி கிடைக்காது என்று கூறி அதற்கான காரணங்களையும் விளக்கியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதை பின்னர் பரூக் அப்துல்லாவும் உறுதி செய்தார். ஆனால், இன்றைய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்த அவர் தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காணச் சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications