2வது முறை பிரதமராக பதவியேற்றார் மன்மோகன்-19 அமைச்சர்களும் பதவியேற்பு
அவருடன் பிரணாப் முகர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஏ.கே.ஆண்டனி, ப.சிதம்பரம், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, குலாம் நபி ஆசாத்,
சுஷில் குமார் ஷிண்டே, வீரப்ப மொய்லி, ஜெய்ப்பால் ரெட்டி, கமல் நாத், வயலார் ரவி, மீரா குமார், முரளி தியோரா, கபில் சிபல், அம்பிகா சோனி, பி.கே.ஹண்டிக், ஆனந்த் ஷர்மா, சி.பி.ஜோஷி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த வண்ணமயமாக நிகழ்ச்சியில் பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
முன்னதாக அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்ததால் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த இந்த பதவியேற்பு விழா ஒரு மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டது.
பிரதமராக பதவியேற்றவுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி ஆகியோரிடம் சென்று வணக்கம் தெரிவித்தார் மன்மோகன் சிங்.
முன்னதாக பிரதமருடன் இன்றே 63 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திமுகவுடனான சிக்கல் காரணமாக முழு அளவிலான அமைச்சரவை இன்று பதவியேற்கவில்லை. வரும் 26ம் தேதி மற்ற அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.
ஆனால், இட ஒதுக்கீட்டு விஷயத்தில் மிகத் தீவிரமாக செயல்பட்ட அர்ஜூன் சிங்குக்கு இம்முறை அமைச்சர் பதவி தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.