வட மாகாணத்தில் தேர்தல்-இலங்கை முடிவு
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடித்து விட்டதாக அறிவித்துள்ள இலங்கை அரசு அதே சூட்டோடு வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவுக்கான இலங்கை தூதர் ஜெயசிங்கே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது நாடு இப்போது தீவிரவாதத்தின் பிடியிலிருந்து விடுபட்டு விட்டது. விரைவில் வட பிராந்தியத்தில் மாகாணக் கவுன்சில் தேர்தலை நடத்துவோம் என்றார்.
கொழும்பு சென்றிருந்த இந்தியத் தூதர்கள் மேனன், நாராயணனிடம் தமிழர்களுடன் அதிகாரப்பகிர்வை மேற்கொள்ள இலங்கை அரசு தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது நீண்ட காலமாக இந்தியா வலியுறுத்தி வரும் வடக்கு மாகாண தேர்தலை நடத்தவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
விடுதலைப் புலிகளிடமிருந்து முன்பே மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் உடனடியாக தேர்தலை நடத்தியது இலங்கை அரசு. அங்கு தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்சியை நிறுவியவர் கருணா. ஆனால் அவருக்கும், பிள்ளையானுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கருணா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை விட்டு விலகி ராஜபக்சே கட்சியில் போய் இணைந்து எம்.பியாகி இப்போது அமைச்சராகவும் உள்ளார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications