திமுகவுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை-காங்
டெல்லி: திமுகவுடன் காங்கிரஸ் கட்சிக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. விரைவில் திமுக, மத்திய அமைச்சரவையில் சேரும் என மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே பிரச்சினை எதுவும் கிடையாது. இது வெறும் யூகமே.
திமுக தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை மேற்கொணடுள்ளது. விரைவில் அவர்கள் அமைச்சரவையில் சேருவார்கள் என நம்புகிறோம்.
2004ம் ஆண்டு மத்தியில் அமைச்சரவை அமைந்தபோது அமைச்சரைவயில் சேருவதற்கு திமுக 9 நாட்கள் எடுத்துக் கொண்டது.
தேர்தலுக்கு முன்பிருந்தே திமுக எங்களது கூட்டணிக் கட்சி. எனவே காங்கிரஸ் கட்சிக்கு அது மிகவும் முக்கியமான கட்சியாகும்.
பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. திமுக சார்பில் யார் அமைச்சராக வேண்டும் என்பது குறித்தெல்லாம் இன்னும் முடிவாகவில்லை. அந்தக் கட்டத்தை இன்னும் பேச்சுக்கள் அடையவில்லை என்றார் ஆசாத்.