கார்த்திக் மீது தாக்குதல்-அதிமுக எம்எல்ஏவுக்கு ஜாமீன்
மானாமதுரை: உள்துறை அமைச்சரும், சிவகங்கை தொகுதி எம்.பியுமான ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், அ.தி. மு.க. எம்.எல்.ஏ. குணசேகரனுக்கு நீதி மன்றம் முன் ஜாமீன் வழங்கியது.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், அதிமுக சார்பில் ராஜகண்ணப்பனும் போட்டியிட்டனர்.
போட்டி கடுமையாக இருந்ததால் காங்கிரஸ் தரப்பு வாக்களார்களுக்கு பணம் சப்பளை செய்ததாக அதிமுக குற்றம் சாட்டியது.
இந்த நிலையில், கடந்த 12 -ம் தேதி இரவு, மானாமதுரை அருகே ராஜகம்பீரம் என்ற இடத்தில் வாக்காளர்களுக்கு இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் பணம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகின்றது.
இதனால், கார்த்தி சிதம்பரத்தின் காரை அ.தி.மு.க. வினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.
இதில், கார்த்தி சிதம்பரத்தின் கார் டிரைவர் சரவணன் காயமடைந்தார். மேலும் உடன் வந்த மூன்று கார்கள் சேதமடைந்தன. அப்போது, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில், அதிமுக எம்எல்ஏ குணசேகரன், முன்னாள் எம்.பி, அன்பழகன், ஊராட்சி தலைவர் தனபாண்டி உள்ளிட்ட 17 பேர் மீது கொலை முயற்சி உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், அ.தி.மு.க. வக்கீல் பிரிவு துணை செயலாளர் குருமுருகானந்தம், மற்றும் 11 பேரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிமுக எம்எல்ஏ குணசேகரன் உள்ளிட்ட அதிமுகவினர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கோரி மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு செய்தனர்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி சோலைமலை அனைவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி அதிமுக எம்எல்ஏ குணசேகரன் உள்ளிட்டவர்கள் சிவகங்கை நகர காவல் நிலையத்தில் மூன்று வாரங்களுக் கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.