திமுகவினரால் தாமதமான விமானங்கள்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கூடிய திமுகவினரால் விமான நிலைய ஊழியர்களே விமான நிலையத்திற்குள் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். அத்தோடு பயணிகளும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளானார்கள். இதனால் விமானங்களும் தாமதமாகின.
சென்னை விமான நிலையம் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ள முக்கிய விமான நிலையம் ஆகும். ஆனால் இந்தப் பாதுகாப்பெல்லாம் அப்பாவி பயணிகளுக்குத்தான். அரசியல்வாதிகள், கட்சிக்காரர்கள் என்று வந்து விட்டால் அதற்கு தனி கவனிப்பு கொடுக்கப்படுவது சாதாரணமாகும்.
கடந்த சில நாட்களாக ஆட்சியமைப்பு நடவடிக்கைகள் டெல்லியில் படு சூடாக நடந்து கொண்டிருந்ததால் டெல்லிக்கு விமானத்தில் சென்ற கட்சிக்காரர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இந்த நிலையில், நேற்று முதல்வர் கருணாநிதி டெல்லியிலிருந்து திரும்பியபோது அவரது பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் வகையில் பாதுகாப்பு வளையத்தை மீறி திமுகவினர் அலையென உள்ளே புகுந்தனர்.
விஐபிகளுக்கு விமான நிலையத்திற்குள் செல்ல தனி வழி உண்டு. இந்தப் பாதையை தற்போது விமான நிலைய சரக்குகள் வளாகத்திற்கு அருகே உள்ள முதல் கேட்டுக்கு மாற்றி விட்டனர்.
இதனால் விமான நிலைய ஊழியர்களுக்கு பெரும் சிக்கலாகியுள்ளது. இந்தப் பாதை வழியாகத்தான் விமான நிலைய ஊழியர்கள் செல்வது வழக்கம்.
நேற்று கருணாநிதி வருகையைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் திமுகவினர் பெருமளவில் குவிந்தனர். இதனால் விமான நிலைய ஆணையக நிர்வாக கட்டடம், பார்க்கிங் பகுதி, ஏர் இந்தியா சேவை கட்டடம் ஆகியவற்றுக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள் பல மணி நேரம் போக முடியாமல் முடங்கிக் கிடந்தன.
அதேபோல கருணாநிதி விமான நிலையத்திற்கு வந்ததும், அனைத்து வாகனங்களையும் போலீஸார் தடுத்து நிறுத்தி விட்டனர். இதனால் விமான ஊழியர்கள் யாரும் போக முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் விமானங்கள் கிளம்புவதிலும் தாமதம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications