யாரை விடுவது..யாரை சேர்ப்பது?-கருணாநிதி ஆலோசனை

இது குறித்து முடிவெடுக்க இன்று கூடுவதாக இருந்த திமுகவின் செயற்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. டாக்டர்கள் அறிவுரையையும் மீறி டெல்லி சென்று வந்த முதல்வர் கருணாநிதிக்கு மீண்டும் முதுகில் வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற கருணாநிதி சிகிச்சை எடுத்துக் கொண்டு இரவில் வீடு திரும்பினா.
அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் செயற்குழுவைக் கூட்டும் திட்டத்தை திமுக கைவிட்டுவிட்டுவிட்டது.
கடைசியாக, திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர் பதவிகளையும், ஒரு தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவியையும், 4 இணை அமைச்சர் பதவிகளும் வழங்க காங்கிரஸ் முன் வந்துள்ளது.
மேலும் பாலு, ராசா ஆகியோர் மீது தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், அவர்கள் தன்னுடன் பணிபுரிந்த மிக மரியாதைக்குரிய அமைச்சர்கள் என்றும், அவர்கள் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை என்றும், அவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ஆனால், திமுக கோரும் அளவுக்கு 3 கேபினட் அமைச்சர்கள், 4 இணையமைச்சர்களையும் சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து, ரயில்வே ஆகிய கேபினட் அமைச்சர் பதவிகளையும் தர முடியாது என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை, ரசாயனம் மற்றும் உரத்துறை ஆகிய கேபினட் பதவிகளையும், தனிப் பொறுப்புடன் கூடிய கனரக தொழில்துறை பதவியையும், சுகாதாரம், பெண்கள் நலம், ரயில்வே, சுற்றுலா ஆகிய இணையமைச்சர் பதவிகளையும் வழங்க காங்கிரஸ் முன் வந்துள்ளது.
3 கேபினட் வேண்டும் என்று அடம் பிடித்தால் தனிப் பொறுப்புடன் கூடி இணையமைச்சர் பதவியை குறைத்துக் கொண்டு தொழிலாளர் நலம் போன்ற துறையைத் தான் தர முடியும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.
இது குறித்து இன்று காலை முதல் மூத்த திமுக தலைவர்களுடன் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர் அறிவாலயம் சென்ற அவர் அங்கும் ஆலோசனைகளைத் தொடர்ந்தார்.
காங்கிரஸ் திட்டத்தை ஏற்றால் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோருக்கு கேபினட் அமைச்சர் பதவிகளையும், ராசாவுக்கு தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவியையும், மு.க.அழகிரி, கனிமொழி, ஜெகத்ரட்சகன், ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோருக்கு இணையமைச்சர்களையும் திமுக தரலாம்.
இதில் தயாநிதிக்கு தகவல் தொழில்நுட்பமும், பாலுவுக்கு ரசாயனம் மற்றும் உரத்துறையும், ராசாவுக்கு கனரக தொழில்துறையும்,
அழகிரிக்கு நலத்துறை இணையமைச்சர் பதவியும், கனிமொழிக்கு பெண்கள்-சமூக நலத்துறை இணையமைச்சர் பதவியும், விஜயனுக்கு ரயில்வேதுறை இணையமைச்சர் பதவியும், ஜெகத்ரட்சகனுக்கு சுற்றுலாத்துறை இணையமைச்சர் பதவியையும் திமுக தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், குடும்ப உறுப்பினர்களி்ல் தயாநிதி அல்லது அழகிரியில் ஒருவர் மட்டுமே கேபினட்-தனிப் பொறுப்பு கொண்ட அமைச்சர் பதவிக்கு வர வேண்டும் மற்ற இரு இடங்களும் பாலு, ராசாவுக்குத் தரப்பட வேண்டும் என முதல்வர் விரும்புவதாகத் தெரிகிறது.
ஆனால், தயாநிதி-அழகிரி இருவருக்குமே கேபினட் பதவியைத் தரலாம், ராசா-பாலுவில் ஒருவருக்கு மட்டும் கேபினட் பதவியைத் தரலாம் என்று மூத்த தலைவர்கள் அவரிடம் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது.
இதனால் கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்து தனது ஆலோசனைகளை நடத்திக் கொண்டுள்ளார் கருணாநிதி.
திமுகவுடன் சிக்கல் தீர்க்கப்பட்ட பின்னர் வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவையை விரிவாக்க பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளார். மேலும் தன்னுடன் நேற்று பதவியேற்ற அமைச்சர்களுக்கான துறைகளையும் அதன் பின்னரே பிரதமர் ஒதுக்குவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications