பிரபாகரன் மனைவி, குழந்தைகள் உயிருடன் இருக்கலாம் - இலங்கை திடீர் அறிவிப்பு
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் மற்றும் இளைய மகன் ஆகியோர் உயிருடன் இருக்கக் கூடும் என இலங்கை திடீரென தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பிரபாகரனின் உடல் கிடைத்ததாக கூறப்பட்ட நந்திக் கடல் கழிமுகப் பகுதியில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரது உடல்களும் மீட்கப்பட்டதாக இலங்கை ராணுவம் செய்தி வெளியிட்டது.
ஆனால் அது உண்மை இல்லை என்று அடுத்த நாளே ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறினார். நேற்று ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் பிரபாகரனின் மனைவி, பொட்டு அம்மன் ஆகியோரது மரணம் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரபாகரன் குடும்பத்தினர் உயிருடன் இருக்கலாம் என பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கெஹலிய ரம்புக்கவெல்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் பிரபாகரனின் மனைவி, அவரது மகள் மற்றும் இளைய மகன் ஆகியோரது உடல்கள் கிடைக்கவில்லை. அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கக் கூடும் என நம்புகிறேன்.
அதேசமயம், பிரபாகரன் உயிரிழந்ததில் சந்தேகம் இல்லை. அவரது உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டத் தேவைகள் ஏற்பட்டால் மரபணு பரிசோதனைகளை நடத்த அரசு தயாராக உள்ளது.
பிரபாகரனின் சடலம் எரிக்கப்பட்ட போதிலும் மரபணு பரிசோதனைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.