For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபாகரன் குறித்த பொய் செய்திகளைத் தவிர்ப்போம்: நெடுமாறன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து செல்வராசா பத்மநாதன் பெயரில் வெளியாகியுள்ள அறிக்கை மற்றும் செய்தி நம்பகத்தன்மையற்றது. அதை யாரும் நம்ப வேண்டாம் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

விடுதலைப்புலிகளின் பன்னாட்டு செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாபன் பெயரில் ஒர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதே பத்மநாபன் கடந்த 19.5.09 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார். இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன்நிலையை மாற்றிக்கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

சிறிதளவு கூட நம்பகத் தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன்.

பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள அரசும், இந்தியாவில் உள்ள சில ஊடகங்களும் பரப்பிய செய்திகளைப் போல இச்செய்தியும் நம்பகத்தன்மையற்றது. ஆழமான உள்நோக்கத்துடன் திட்டமிட்டு இச்செய்தி பரப்பப்படுகின்றது என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்.

பிரபாகரனின் சக தளபதிகளைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரப்படியான அறிவிப்பு வெளியிடும் உரிமை இல்லை. வேறு யார் என்ன அறிவித்தாலும் அதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கையில் சிங்கள போர்ப்படையின் கொடூரமானத் தாக்குதலின் விளைவாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களும், போராளிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல், உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் மருத்துவ வசதியின்றி உயிருக்காகப் போராடி வருகின்றனர்.

மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, மருந்து, குடிநீர் வசதி இல்லாமல் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுத் துடிக்கின்றனர். பாதுகாப்பட்ட வலயங்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள போர்ப்படை முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சித்ரவதைச் செய்யப்படுகின்றனர்.

போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒருபுறம் ஏமாற்றிக் கொண்டு மறுபுறம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் மீதும் கொலை வெறித் தாக்குதலைச் சிங்கள போர்ப்படை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இக்கொடுமைகளையெல்லாம் மறைப்பதற்காகவும், திசை திருப்புவதற்காகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யான செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன.

பிரபாகரன் எந்த லட்சியத்திற்காகப் போராடி வருகிறாரோ அது இன்னமும் எட்டப்படவில்லை. தமிழீழ மக்களின் துயரம் தொடர்கிறது. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும், தளபதிகளும் பிரபாகரனின் வழிகாட்டலுடன் அந்த இலட்சியத்தை நிறைவேற்றும் உறுதியுடன் களத்தில் போராடி வருகிறார்கள்.

சொல்லொணாத் துன்பங்களுக்கு நடுவிலும் சிறிதளவும் மனந்தளராமல் தமிழீழ மக்களுடன் உறுதியோடு போராளிகளுடன் ஒன்றிணைந்து நிற்கின்றனர்.

எனவே இந்தப் பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு லட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும். இதுதான் அவரை நாம் மதிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் உரிய அடையாளம் ஆகும் என்று கூறியுள்ளார்.

பிரபாகரன் தலைமையில் போர் எழுச்சி பெறும் - திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், சிங்கள வெறியர்களின் அடக்கு முறை, இன வெறி போன்ற காரணங்களால் தமிழ் ஈழப்போர் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், பிரபாகரன் தலைமையில் மீண்டும் தமிழ் ஈழப்போர் எழுச்சி பெறும்.

தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவோம். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X