ஒத்தி வைக்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம்-நாளை மறுதினம் நடக்கும்?

கடந்த வெள்ளிக்கிழமை மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. திமுகவுடன் ஏற்பட்ட பதவி ஒதுக்கீடு குழப்பம் தொடர்பாக 19 கேபினட் அமைச்சர்கள் மட்டும் பிரதமருடன் பதவியேற்றனர்.
இந் நிலையில், திமுகவை சமரசப்படுத்த முயற்சிகள் நடந்தன. அதன் விளைவாக அமைச்சரவையில் சேர திமுக சம்மதம் தெரிவித்து விட்டது. அக்கட்சிக்கு 3 கேபினட் அமைச்சர்கள், நான்கு இணை அமைச்சர் பதவிகள் தரப்படவுள்ளன.
இதுதொடர்பான தனது ஒப்புதலை திமுக நேற்றே தெரிவித்து விட்டது.
இதையடுத்து இன்று மாலை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 10 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 50 இணையமைச்சர்கள் இன்று பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நாட்டின் அனைத்துப் பகுதிகள், முக்கிய சமூகத்தினர், ஜாதிகளுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் அமைச்சரவையை உருவாக்க சோனியா திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக தொடர் ஆலோசனைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அமைச்சரவையில் இடம் பிடிக்க காங்கிரசார் மத்தியில் கடும் போட்டா போட்டியும் ஏற்பட்டுள்ளது.
மேலும் திமுகவுக்கு கூடுதலாக கேபினட் அமைச்சர் பதவிகளை வழங்குவதை சரத் பவார், மம்தா பானர்ஜி ஆகியோர் எதிர்ப்பதாலும் தங்களது கட்சியினருக்கு கூடுதல் பதவிகளைக் கேட்பதாலும் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
இதனால் பட்டியலை இறுதி செய்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து தனது கட்சியில் அமைச்சர் பதவி கேட்போர் மற்றும் கூட்டணித் தலைவர்கள் என அனைவரையும் சமாதானப்படுத்திவிட்டு பின்னர் அமைச்சரவையை விரிவாக்க முடிவு செய்யப்பட்டது.
நேற்று மன்மோகன் சிங்கும், பிரணாப் முகர்ஜியும், சோனியா காந்தியும் விரிவான ஆலோசனை நடத்தினர். இன்று காலையும் இவர்கள் மீண்டும் ஒரு சுற்று ஆலோசனை நடத்தினர்.
ஆனால் இதிலும் பட்டியலை இறுதி செய்ய முடியவில்லை. இதையடுத்து இன்று நடக்கவிருந்த அமைச்சரவைக் கூட்டமும் அமைச்சரவை விரிவாக்கமும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந் நிலையில் இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டமும் பிரதமரின் இல்லத்தில் நடக்கிறது. இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம் நாளை மறுதினம் நடக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications