ஜனநாயகப் பாதையில் புலிகள்-இலங்கை நிராகரிப்பு
கொழும்பு: ஜனநாயகப் பாதைக்குள் நுழைவதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளதை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது.
இது குறித்து இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளரும் அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோதபய ராஜபக்சே பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில்,
ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் ஜனநாயகப் பாதையில் நுழைவதாகக் கூறியுள்ளனர். ஆனால், அவர்களை நம்ப முடியாது. தீவிரவாதத்தை அவர்கள் கைவிட மாட்டார்கள்.
தமிழர்களுக்காக இலங்கையில் இப்போதே போதிய அளவுக்கு கட்சிகள் உள்ளன. இதனால் புலிகளும் ஜனநாயகத்துக்கோ அரசியலுக்கோ வர வேண்டியதில்லை. அதை அனுமதிக்கவும் முடியாது.
மேலும் புலிகள் மறைத்து வைத்துள்ள ஏராளமான ஆயுதங்களை இன்னும் நாங்கள் முழுமையாக கைப்பற்றவில்லை. அவர்கள் அதை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மறைத்து வைத்துள்ளனர்.
மேலும் இந்தப் பகுதிகளில் புலிகளில் மிச்சமிருப்பவர்கள் மறைந்துக்கலாம். அவர்களையும் ஒழிக்க வேண்டியுள்ளது. கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியுள்ளது. இதனால் ராணுவத்தின் பணியே இன்னும் முடியவில்லை.
பல்வேறு நாடுகளில் உள்ள புலிகளின் கட்டமைப்பை உடைக்க வேண்டிய பணியும் பாக்கியுள்ளது. இந்த விஷயத்தில் மேற்கத்திய நாடுகள் எங்களுக்கு உதவ வேண்டும். புலிகளுக்காக இந்த அமைப்புகள் ஆயுதங்களை வாங்கிக் வருகின்றனர்.
கொழும்பில் தமிழர்களைப் பிரித்து விசாரணை நடத்துவதாக சொல்வது தவறு. எல்லோரையும் தான் சோதனையிடுகிறோம். இன்னும் கொஞச காலத்துக்கு இது நீடிக்கும். விரைவில் நிலைமை சகஜமாகிவிடும் என்றார்.
ராணுவம் பலப்படுத்தப்படும்-சரத் பொன்சேகா:
இதற்கிடையே இலங்கை ராணுவம் ஆள் பலத்தை அதிகரிக்கவுள்ளதாக அதன் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
ராணுவத்தில் புதிதாக 1 லட்சம் சேர்க்கப்படுவார்கள் என்றும், விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டாலும் வெளிநாடுகளில் இருந்து ஏதாவது அமைப்பு தாக்குதல் நடத்தலாம் என்பதால் அனைத்து விதமான சவால்களையும் சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்