14 கேபினட்-45 இணையமைச்சர்கள் நாளை பதவியேற்பு
இதில் தயாநிதி, அழகிரி, ராஜா, வாசன் உள்பட 14 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 45 பேர் இணையமைச்சர்களாகவும் பதவியேற்கவுள்ளனர். இந்த 45 பேரில் 7 பேர் தனிப் பொறுப்பு கொண்ட இணையமைச்சர்கள் ஆகின்றனர்.
14 கேபினட் அமைச்சர்கள்:
முன்னாள் முதல்வர்களான விலாஸ் ராவ் தேஷ்முக் (மகாராஷ்டிரம்), வீர்பத்ர சிங் (இமாச்சல் பிரதேசம்), பரூக் அப்துல்லா (காஷ்மீர்), திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன், அழகிரி, ராஜா, காங்கிரசைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே, குமாரி ஷெல்ஜா, சுபோத்காந்த் சகாய், எம்எஸ் கில், பவன்குமார் பன்சால், முகுல் வாய்னிக், காந்தி லால் பூரியா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகின்றனர்.
7 தனிப் பொறுப்பு கொண்ட இணையமைச்சர்கள்:
பவாரி்ன் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல், காங்கிரசைச் சேர்ந்த பிரிதிவிராஜ் சவான், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சல்மான் குர்ஷித், ஜெய்ராம் ரமேஷ், கிருஷ்ணா திராத், தின்சா படேல் ஆகியோர் தனிப் பொறுப்பு கொண்ட இணையமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர்.
38 இணையமைச்சர்கள்:
இணையமைச்சர்களாக திமுகவைச் சேர்ந்த பழனிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன், நடிகர் நெப்போலியன் மற்றும் இ.அகமத், நாராயணசாமி, ஸ்ரீகண்ட் ஜேனா, முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், பனபாக லட்சுமி, அஜய் மகான், முனியப்பா, நமோ நாராயணன் மீனா, ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத், சச்சின் பைலட், சாய் பிரசாத்,
குருதாஸ் காமத், மகதேவ் கண்டேலா, ஹரிஷ் ராவத், தாமஸ், சுகதா ரே, தினேஷ் திரிவேதி, சிசிர் அதிகாரி, சுல்தான் அகமத், முகுல் ராய், மோகன் ஜாதுவா, பிரநீத் கெளர், சசி தரூர், புரந்தேஸ்வரி, பல்லம் ராஜூ, பாரத் சிங் சோலன்கி,
துஷார்பாய் செளத்ரி, அருண் யாதவ், பிரதீக் பிரகாஷ்பாபு படேல், ஆர்பிஎன் சிங், வின்சென்ட் பாலா, பிரதீப் ஜெயின், அகதா சங்மா உள்ளிட்டோர் இணையமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்.
நாளை காலை 11.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.
முன்னதாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் இன்றும் மீண்டும் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அமைச்சரவை பட்டியல் தயாரானது. இதைத் தொடர்ந்து அமைச்சர்களாகப் போகும் எம்பி்க்களிடம் சோனியாவும் பிரதமரும் தொலைபேசியில் பேசினர்.
முன்னதாக கடந்த 22ம் தேதி 19 கேபினட் அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் பதவியேற்றுக் கொண்டாலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு அமைச்சர்கள், துறைகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இரு தரப்பும் விட்டுக் கொடுத்ததையடுத்து திமுக சிக்கல் தீர்ந்தது. ஆனால், மம்தா பானர்ஜியும் சரத் பவாரும் திமுகவுக்கு மட்டும் கூடுதலாக அமைச்சர்களா என்று கேள்வி எழுப்பியதையடுத்து மீண்டும் பிரச்சனை உருவானது.
இதையடுத்து மம்தா கட்சிக்கு 6 இணையமைச்சர்களும், பவார் கட்சிக்கு கூடுதலாக ஒரு இணையமைச்சரும் வழங்க சோனியா ஒப்புக் கொண்டார்.
பின்னர் அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்துப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சரவை பட்டியல் உருவாக்கப்பட்டது.
லோக் சபா, ராஜ்ய சபாவைச் சேர்த்து காங்கிரசுக்கு 300 எம்பி்க்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அமைச்சர் பதவிக்கு போட்டி போட்டதால் பட்டியலை இறுதி செய்வது தாமதமானது.
இருப்பினும் இன்று சோனியாவும் பிரதமரும் நடத்திய ஆலோசனையில் அமைச்சர்கள், துறைகள் முடிவு செய்யப்பட்டு பட்டியல் தயார் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திமுகவைப் பொறுத்தவரை பதவியேற்கச் சென்ற அழகிரி உள்ளிட்ட எம்பிக்கள் தொடர்ந்து டெல்லியிலேயே தங்கியுள்ளனர்.
இதில் ராஜாவுக்கு தகவல் தொழில்நுட்பம், அழகிரிக்கு ரசாயனம் மற்றும் உரம், தயாநிதிக்கு ஜவுளித்துறை கேபினட் அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று தெரிகிறது.
பாலு மற்றும் கனிமொழிக்கு அமைச்சர் பதவிகள் கிடைக்காது என்று தெரிகிறது. இவர்களில் பழனிமாணிக்கம் கடந்த முறை நிதித்துறை இணையமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் மத்தியில் கேபினட் அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆகவும் இணையமைச்சர்கள் எண்ணிக்கை 45 ஆகவும் இருக்கும்..
சபாநாயகர் யார்?:
சபாநாயகர் பதவிக்கு ஆந்திராவைச் சேர்ந்த கிஷோர் சந்திர தியோவின் பெயர் அடிபடுகிறது. இது தொடர்பான முடிவு வரும் 30ம் தேதி எடுக்கப்படும். துணை சபாநாயகர் பதவியை பாஜகவுக்கு விட்டுக் கொடுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.