தமிழகம் முழுவதும் வைகோ சூறாவளி சுற்றுப்பயணம்
சென்னை: தேர்தல் தோல்வியால் தொய்வடைந்துள்ள தொண்டர்களை தட்டி உற்சாகப்படுத்தவும், கட்சியைப் பலப்படுத்தவும் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் வைகோ.
இதுகுறித்து மதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
சென்னை தாயகத்தில் நடைபெற்ற ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில், கட்சியின் கட்டுமானத்தை வலுப்படுத்த, ம.தி.மு.க. பழைய உறுப்பினர்களை புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர் சேர்க்கவும் தீர்மானிக்கப்பட்டது.
ஜுலை 1-ந் தேதி உறுப்பினர் சேர்க்கும் பணிகளை தொடங்கி, ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் உறுப்பினர் சேர்ப்பு பணிகளை நிறைவு செய்யவும், செப்டம்பர் 15-ந் தேதி முதல், கிளை கழக தேர்தல்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கு முன்பாக, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தலைமை நிர்வாகிகளும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்ட செயல்வீரர்கள் கூட்டங்களில் பங்கேற்று, உறுப்பினர் சேர்ப்பு படிவங்களை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுச்செயலாளர் திருப்பூர் சு.துரைசாமி, கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள்.
மே 30-ந் தேதி காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொடங்கும் சுற்றுப்பயணம் ஜுன் 28-ந் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் முடிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.