ஆஸ்திரேலியாவில் நான்கு இந்திய மாணவர்கள் மீது வெறித் தாக்குதல் - ஒருவர் உயிர் ஊசல்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் ஆந்திராவைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் மீது கொலை வெறி இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நான்கு இந்திய மாணவர்களையும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் கும்பல் ஒன்று மெல்போர்ன் நகரில் வழிமறித்து ஸ்க்ரூ டிரைவர் உள்ளிட்ட ஆயுதங்களால் இனவெறியுடன் தாக்கியது. இதில் நான்கு பேரும் காயமடைந்தனர்.
அவர்களில் 25 வடதாகும் ஷ்ராவன் குமார் என்ற மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலை மிகவும் அபாயகரமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா கடும் கண்டனம்..
இந்த இனவெறித் தாக்குதலுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஷ்ராவன் குமார் நிலை குறித்து இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நமது மாணவர்கள் மீது மெல்போர்ன் நகரில் நடந்த இந்தத் தாக்குதல் மிகவும மோசமானது, கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தனது நாட்டுக்கு வந்து படிக்கும் பிற நாட்டு மாணவர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு ஆஸ்திரேலிய அரசுக்கு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.