For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவில் பூசாரி படுகொலை - ரூ. 2 கோடி நகை திருட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் ஜைன மதக் கோவிலின் பூசாரியைப் படுகொலை செய்த கொள்ளைக் கும்பல், கோவிலிலிருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான நகையைத் திருடிக் கொண்டு துணிகரமாக தப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜைன மதத்தினரின் கடவுளான மகாவீர் தீர்த்தங்காராவுக்கு சவுகார்பேட்டை மின்ட் தெருவில் கோவில் உள்ளது. ஜெயின் இனத்தவரால் இக்கோவில் 1913-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சென்னையில் உள்ள மிகப்பழமையான கோவில்களில் 3-வது ஜெயின் கோவிலாக இது கருதப்படுகிறது.

ஸ்ரீசந்திரபிரபு சாமி ஜீனா ஜெயின் கோவில் என்று அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான ஜெயின்கள் வந்து வழிபாடு நடத்தி செல்வது உண்டு

2 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலின் கீழ் தளத்தில் அலுவலகமும், முதல் மாடியில் கோவில் கருவறையும் உள்ளது.

இந்த கோவிலில் பகதூர் சிங் என்பவர் காவலாளியாக இருந்து வந்தார். 20 நாட்களுக்கு முன்பு, தான் ஊருக்குப் போவதாகவும், அதற்குப் பதிலாக பிரேம் சிங் என்பவர் பணியில் இருப்பார் எனவும் கூறி அவரை சேர்த்து விட்டார்.

இதையடுத்து பிரேம் சிங்கை வாட்ச்மேன் ஆக நியமித்த கோவில் நிர்வாகிகள், கோவில் வாசல் சாவிகளை கொடுத்து வைத்திருந்தனர்.

வாட்ச்மேன் பணிக்கு வந்த பிரேம் சிங்கின் புத்தி கோணலாக போனது. கோவிலில் ஏகப்பட்ட நகைககள் இருப்பதை நோட்டம் விட்ட அவர், அத்தனையையும் கொள்ளையடிக்க திட்டமிட்டார்.

சமீபத்தில் ஜெயின் கடவுளுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. சுமார் பதினொன்றரை கிலோ தங்கத்தால் செய்யப்பட்டது அந்த அங்கி. அதை அபேஸ் செய்ய திட்டமிட்டார் பிரேம் சிங்.

நேற்று இரவு பூஜைகள் முடிந்த பிறகு கோவில் பூசாரிகள் இம்மத்து மால், பரத் இருவரும் முதல் மாடியில் உள்ள கோவிலுக்குள் படுத்துக் கொண்டனர்.

நள்ளிரவு 1 மணியளவில் பிரேம்சிங், தன் கூட்டாளிகள் 4 பேருடன் அங்கு நுழைந்தார். 5 பேரும் முகமூடி அணிந்திருந்தனர். பூசாரி இம்மத்துமால் மற்றும் பரத்தின் கை, கால்களை கயிற்றால் கட்டி, அசைய விடாமல் பிடித்தப்படி முகத்தை தலையணையால் அமுக்கினார்கள்.

இதில் இம்மத்து மால் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 பேர் பரத்தையும் கொல்ல முயன்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்தவர் போல நடித்து உயிர் தப்பிவிட்டார்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு, பிரேம்சிங் பீரோக்கள் இருந்த அறைக்குள் நுழைந்து மகாவீர் தீர்த்தங்கராவின் தங்க அங்கியை கொள்ளையடித்தார். பின்னர் அனைவரும் கோவில் பின் பக்கமாக குதித்துத் தப்பி விட்டனர்.

இறந்தது போல நடித்து தப்பிய பூசாரி பரத், உதவி கேட்டு அலறினார். பின்னர் கோவிலின் செயலாளர் ஜேத்மல், நிர்வாகி முகேசுக்கு தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். பூசாரி இம்மத்துமால் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். வடசென்னை போலீஸ் இணைக் கமிஷனர் ரவி, உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், குணவர்மன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

விசாரணையில் பிரேம்சிங்தான் இதற்குக் காரணம் எனத் தெரிய வந்தது. இதையடுத்து பிரேம் சிங் தங்கியிருந்த அறையை சோதனையிட்டபோது அங்கு திருடப்பட்ட தங்க அங்கியின் ஒரு பகுதி இருந்தது. அதன் அளவு இரண்டரை கிலோ ஆகும்.

எட்டரை கிலோ தங்க அங்கியுடன் தப்பியுள்ளார் பிரேம் சிங். அதன் மதிப்பு கிட்டத்தட்ட 2 கோடியாகும்.

இந்த நிலையில் கோவிலின் பின் பகுதியில் தங்க அங்கியின் ஒரு பகுதி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது இரண்டரை லட்சம் மதிப்பிலானதாகும். அதை போலீஸார் மீட்டனர்.

துணிகரமாக நடந்துள்ள இந்த கொள்ளை மற்றும் கொலையில் ஈடுபட்ட பிரேம் சிங் உள்ளிட்டவர்களை கண்டுபிடிக்க ஆறு தனிப்படைகளை போலீஸார் அமைத்துள்ளனர்.

சமீபத்தில்தான் ஏர் ஹோஸ்டஸ் ஒருவர் செல்போன் திருடனால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கோவில் பூசாரி கொல்லப்பட்டிருப்பது சென்னை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X