For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சரணடைந்த பிரபாகரன் சித்திரவதைப்படுத்தி படுகொலை?

By Staff
Google Oneindia Tamil News

Prabhakaran
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களை மூன்றாம் தரப்பு ஒன்று இலங்கை ராணுவத்திடம் சரணடைய வைத்ததாகவும், சரணடைந்த பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை இலங்கை ராணுவம் மிகக் கொடூரமாக கொலை செய்ததாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கொடூரமாக சித்திரவதைப்படுத்தி பின்னர் கொன்றதாகவும் அந்தத் தகவல் கூறுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், புலித்தேவன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சரணடைய சென்றபோது அவர்களை ராணுவம் மிகக் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக முன்பு செய்தி வெளியானது. இதைப் பார்த்து கொதித்துப் போய் தட்டிக் கேட்ட நடேசனின் மனைவியான சிங்களப் பெண்மணியையும் ராணுவம் கொடூரமாக சுட்டுக் கொன்றதாக செய்திகள் வெளியாகின.

இந் நிலையில் சரணடைந்த புலிகள் அமைப்பின் தலைவர்களில் பிரபாகரனும் ஒருவர் என இந்த புதிய செய்தி கூறுகிறது.

மூன்றாவது தரப்பு ஒன்றின் முயற்சியினால் பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத் தலைவர்கள் ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர். அவ்வாறு சரணடைந்த புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிடடோரை மிகக் கொடூரமாக சித்திரவதைப்படுத்திக் கொன்றதாக தமிழ்சர்க்கிள்.நெட் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த இணையம் வெளியிட்டுள்ள செய்தி..

பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவரின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவரைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும்.

புலிகள் மேலான எந்த குற்றச்சாட்டையும், ஒரு நாட்டின் சட்டத்தின் எல்லைக்குள் விசாரணை செய்ய முடியும். இதன் மூலம் தண்டிக்கவும் முடியும். இதற்கு சட்டங்கள் வைத்திருக்கின்றவர்கள் தான், சட்டவிரோதமாக தம் பாசிச வழியில், சரணடைந்த பிரபாரகரனை காட்டுமிராண்டித்தனமாக கொன்றனர். அவரின் உடலைக் கூட பலவிதமான இழிவுக்குள்ளாக்கி அவமானப்படுத்தினர். இவை எல்லாம் போர்க்குற்றங்கள் தான்.

இறந்த உடலை அவமானப்படுத்துவது கூட குற்றம் தான். யுத்தத்தில் இறந்த உடலை அவமானப்படுத்து, போர்க் குற்றம். அதுவும் இனத்துக்காக போராடியவரை இப்படிச் செய்வது, இனவிரோதக் குற்றமாகும். இதை சர்வதேச சட்டங்கள் கூட வரையறுக்கின்றது. ஆனால் பேரினவாத பாசிச பயங்கரவாதமோ, இதை உலகறிய காட்சிப்படுத்துகின்றது.

இதற்குள் சிங்களப் பேரினவாதம் தம் போர்க் குற்றங்களை உலகறியக் கூடாது என்பதற்காக, பிரபாகரன் எப்படி சாகடிக்கப்பட்டார் என்பதை மறைக்க தலைக்கு துணி போட்டனர்.

எப்படிப்பட்ட மரணம் என்பதை, குற்றத்தின் முழுத் தன்மையை எடுத்துக் காட்டும் வண்ணம் படத்தை இணைத்துள்ளோம். எப்படி பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதை, இது எடுத்துக் காட்டுகிறது.

அவர் மோதலில் சாகவில்லை என்பதையும், மூன்றாம் தரப்பிடம் சரணடைந்த பிரபாகரனை, மூன்றாம் தரப்பின் துணையுடன் எப்படி பேரினவாத பாசிட்ஸ்டுகள் உயிருடன் சிதைத்தனர் என்பதை இந்தப் படம் எடுத்துக் காட்டுகிறது.

இங்கு இணைக்கப்பட்டுள்ள மற்றைய படங்கள், அரச பேரினவாதிகள் இறந்த உடலை அவமானப்படுத்தும் வக்கிரத்தை எடுத்துக் காட்டுகின்றது. முன்பு இறந்த ஒரு பெண் புலி உறுப்பினரின் உடலை இதே மாதிரித்தான், பேரினவாத சிங்கள வீரர்கள் மேய்ந்தனர்.

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்.

இதே அவமானத்தைத்தான் பிரபாகரன் உடல் சந்திக்கிறது. இறந்த உடலுக்கு கோமணம் கட்டி மகிழ்கின்ற பேரினவாத அதிகார வர்க்கம், தமிழனுக்கு கோமணம் கட்டிய வக்கிரத்துடன் அனைத்தும் நடந்தேறியுள்ளது.

பிரபாகரன் உடல் பலவிதமாக சிதைக்கப்படுகிறது. முதலில் அரசு காட்டிய படம், அடித்து வீங்கிச் சிதைந்து போன முகம் தான்.

இறந்த பெண்ணின் உடலை மேய்ந்த அதே வக்கிரம் தான் இங்கும். பிரபாகரன் உடல் மேல் வன்முறைகள், எதிர்காலத்தில் காட்சிகளாக கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இங்கு குற்றங்கள் பல. பிரபாகரனின் வெறும் உடலுக்கு அப்பால், மூன்றாம் தரப்பிடம் நம்பி சரணடைந்த ஒருவருக்கு நடந்த கதையிது. அவரை சித்திரவதை செய்து கொன்ற உண்மையை, இங்கு பளிச்சென்று இந்தப் படம் எடுத்துக் காட்டுகிறது. போர்க் குற்றத்தின் முழுப் பரிமாணத்துடன், இது அரங்கேறியுள்ளது.

வெளிநாட்டு புலித் தலைமை (செல்வராசா பத்மநாதன்) தன் குற்றத்தை மறைக்க பிரபாகரன் வீரமரணம் என்று ஒருபுறம் சொல்லியும், இல்லை உயிருடன் உள்ளார் என்று ஏனையோர் சொல்லியும், தன் தலைவர் மேலான இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக உள்ளனர்.

பிரபாகரனை சரணடைய வைக்க தாம் மூன்றாம் தரப்பு ஊடாக நடத்திய காட்டிக் கொடுப்பை மூடிமறைக்க இந்தப் போர்க் குற்றமே இவர்களால் மூடிமறைக்கப்படுகிறது.

இந்த உடல் பிரபாகரனுடையதல்ல என்றதன் மூலம், பேரினவாதம் செய்த இழிவையும் இந்த படுகொலையையும் கூட மறுக்கின்றனர்.

உண்மையில் பிரபாகரனை மூன்றாம் தரப்பிடம் சரணடைய வைத்து, அதன் மூலம் தாங்கள் காட்டிக் கொடுத்த இந்தச் சதியை மூடி மறைக்கின்றனர். இதன் மூலம் தலைவனாக தமிழ் மக்களால் கருதப்பட்ட ஒருவர் மேல் நிகழ்ந்த போர்க்குற்றத்தின் தன்மையையே, இவர்கள் இல்லாததாக்கப் பார்க்கின்றனர் என்று அந்த செய்தி கூறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X