மலேசிய தமிழர்கள் ஜோக்கர்கள்: இலங்கை தூதர் திமிர்
கோலாலம்பூர்: ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தும் மலேசியா வாழ் இந்திய வம்சாவளியினர் ஜோக்கர்கள் என கிண்டலடித்துள்ளார் மலேசியாவுக்கான இலங்கை தூதர் டாக்டர் ரனசிங்கே.
ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்காகவும், இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டித்தும் பிரமாண்ட முருகன் கோவில் அமைந்துள்ள பட்டு குகை பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழர்கள் பெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.
இதை கிண்டலடித்துள்ளார் ரனசிங்கே. இதுகுறித்து அவர் கூறுகையி்ல், பட்டு குகைப் பகுதியில் நடந்த போராட்டத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே சர்வதேச நிவாரணப் பணிக் குழுக்களை போர் பாதித்த பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்காமல் வைத்துள்ளது இலங்கை அரசு.
இந்த நிலையில் இது தெரியாமல் போராட்டம் நடத்தியவர்களை ஜோக்கர்கள் என்றுதான் கூற வேண்டும் என கிண்டலடித்துள்ளார் ரனசிங்கே.
உலகத் தமிழர் நிவாரணம் மற்றும் பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பட்டு குகை போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கையில் போர்க் குற்றங்களை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்கள் மீது உலக போர்க்குற்ற டிரிப்யூனலில் வழக்கு தொடர ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், போர் பாதித்த பகுதிகளுக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், தனி ஈழம் அமைக்க வேண்டும். அது அமையும் வரை ஐ.நா. அமைதி காக்கும் படை அங்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.