திருப்பதியில் பக்தர் வெள்ளம்-விஐபி அனுமதி ரத்து!
திருப்பதி: கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலை மோதுகிறது. ஒரே நாளில் 3 லட்சம் பேர் வரை குவிந்ததால் விஐபிக்களுக்கான சிறப்பு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டது.
நேற்று மட்டும் திருப்பதிக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். இதனால் திருப்பதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகத்தான் இருந்தது.
விரைவு தரிசனம் அமல்படுத்தப்பட்டும் கூட அதிகாலை முதல் மாலை வரை ஒன்றரை லட்சம் பேர் தான் தரிசனம் செய்ய முடிந்தது. இதனால் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
பக்தர்கள் 4 கி.மீ. தூரம் வரை வரிசையில் காத்திருந்தனர். அன்னதான காம்ப்ளக்ஸ், மொட்டை அடிக்கும் இடம் போன்றவற்றிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கோடை விடுமுறையின்போது இதற்கு முன்பு இவ்வளவு கூட்டம் திருப்பதிக்கு வந்ததில்லை என்று தெரிவித்த தேவஸ்தான அதிகாரி ஒருவர், விஐபிக்கள் யாரும் தற்போது திருப்பதிக்கு வரவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.