நாடாளுமன்ற பாஜக தலைவராக அத்வானி தேர்வு
டெல்லி: நாடாளுமன்ற பாஜக தலைவராக எல்.கே.அத்வானி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டெல்லியில், நேற்று மக்களவை பாஜக கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் அத்வானி மக்களவை பாஜக தலைவராக (எதிர்க்கட்சித் தலைவராக) தேர்ந்தெடுக்ப்பட்டார்.
ஆரம்பத்தில் இந்தப் பதவியை ஏற்க விரும்பவில்லை என்று கூறி வந்தார் அத்வானி. இருப்பினும் கட்சித் தலைவர்களின் வலியுறுத்தலைத் தொடர்ந்து ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
இருப்பினும் கூட இந்தப் பதவியில் அவர் குறுகிய காலம் மட்டுமே இருப்பார் எனத் தெரிகிறது. அதன் பின்னர் ஜஸ்வந்த் சிங், சுஷ்மா சுவராஜ் போன்ற தலைவர்களில் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.
நேற்று நடந்த எம்.பிக்கள் கூட்டத்தில் அத்வானி பேசுகையில், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட், ஒரிசா போன்ற வட மாநிலங்களில் நமது கட்சி மோசமாக தோல்வி அடைந்தது ஏன் என்பதை கண்டறிய வேண்டும். அத்துடன் குஜராத், மத்திய பிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றி பெறாததற்கான காரணத்தையும் ஆராய வேண்டும்.
பா.ஜ.கவின் ஆதரவு தளம் விரிவடைந்து இருப்பதால், அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று நாம் எதிர்பார்த்தது தவறு அல்ல. ஆனால், மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்க வேண்டும் என்றார் அத்வானி.
பா.ஜ.க சார்பில் இரு சபைகளின் துணைத் தலைவர்கள் மற்றும் மேல் சபை தலைவரை தேர்ந்து எடுக்க கூட்டத்தில் அத்வானிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.